ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 22). கட்டட தொழிலாளியான இவர் கடந்த 27ஆம் தேதி காலையில் ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் உள்ள வயல்வெளியில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவலர்கள் இன்று கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஈரோடு லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த மதன், விக்னேஸ்வரன் , சூரம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் குமார், சூரம்பட்டியை சேர்ந்த மெர்லின் என்கிற தினேஷ், ஈரோடை சேர்ந்த திலீப்குமார் ஆகியோர் என்பதும், அவர்கள் 5 பேரும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கடந்த 26அம் தேதி இரவு நாகராஜை கொலை செய்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்தக் கொலை வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட மதன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் நான் சொந்தமாக நிதி நிறுவனமும், எங்கள் பகுதியில் கஞ்சா விற்பனையும் செய்து வருகிறேன். என் மீது அடிதடி வழக்குகளும் உள்ளன. நான் எனது நண்பர்களுக்கு செலவுக்கு அடிக்கடி பணம் கொடுத்து வந்தேன். இந்நிலையில் புத்தாண்டு அன்று வடிவேல் மெர்லி என்பவர் என்னிடம் தகராறு செய்தார், இதில் எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவரை நான் அடித்துவிட்டேன். இதனால் வடிவேல் மெர்லி அவரது நண்பரான புறா சரவணன் என்கிற சரவணனிடம் சென்று சொன்னார். சரவணன் என்னிடம் வந்து பலமுறை கடன் கேட்டுள்ளார். நான் அவருக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்டேன்.
இதனால் சரவணன் என்மீது கோபத்தில் இருந்தார். மேலும், என்னை கொலை செய்வதாகவும் அவர் நண்பர்களிடம் கூறியுள்ளார். எனவே சரவணனை கொலை செய்ய நான் திட்டமிட்டேன். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சூரம்பட்டியில் உள்ள எனது அலுவலகத்தில் வைத்து எனது நண்பர்களான விக்னேஷ்வரன், விக்னேஷ் குமார், தினேஷ், அனீஸ், சுஜித் என்கிற பிரவீன்குமார், ரியாஸ், தமிழ்செல்வன், கலைசெல்வன், பாரூக், மணி, சியாம்பிரகாஷ், திலீப்குமார் ஆகிய 12 பேருடன் சோ்ந்து சரவணனை கொலை செய்யத் திட்டமிட்டோம். கடந்த வாரம் திருநெல்வேலிக்கு சென்று நான் ஒரு அரிவாளையும், 4 கத்திகளையும் வாங்கி எனது காரில் வைத்திருந்தேன்.