ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் அமைந்துள்ளது சங்கேமேஸ்வரர் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர் ஒருவரின் மூலமாக வேதநாயகி யானை அளிக்கப்பட்டது. இந்த யானை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கோயில் நிர்வாகம் சிகிச்சை அளித்து வந்தது.
இதையடுத்து யானையை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க வனத்துறைக்கு உத்தரவிடக்கோரி, விலங்கின ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நேற்று வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள யானையை ஆய்வு செய்து, அதற்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தலைமை வனப் பாதுகாவலருக்கு உத்தரவிட்டனர்.
ஆனால், கால் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமலும் கடந்த 10 நாட்களாக சரியாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு இருந்த வேதநாயகி யானை, இன்று அதிகாலையில் திடீர் என்று உயிரிழந்தது.