மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இரவு, அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் ஊருக்குள் புகும் காட்டு யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் வஞ்சியம்மன் நகரில் இன்று (டிச.12) காலை 6 மணியளவில் புகுந்த ஒற்றை யானை, அங்கு நின்று கொண்டிருந்த ஆறுமுகம் என்ற முதியவரை தாக்கி கீழே தள்ளியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்தார்.
இதனையடுத்து அருகில் இருந்த இரண்டு இளைஞர்களையும் அந்த யானை தாக்க முற்பட்டபோது, இருவரும் தப்பி ஓடினர். அப்போது, அவர்களை யானை துரத்தி தாக்கியதில் இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்து சத்தம் எழுப்பி யானையை விரட்டினர். தொடர்ந்து கோவை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஒற்றை ஆண் காட்டு யானையை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.