கோயம்புத்தூர் : இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொடா லொக்கா. இவர், கோவை சேரன்மாநகர் பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018ஆம் ஆண்டு முதல் ரகசியமாக வசித்து வந்தார்.
இந்நிலையில் அங்கொடா லொக்கா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்று சென்று, மதுரையில் தகனம் செய்தனர்.
இது குறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி., க்கு ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, மற்றும் அங்கொடா லொக்காவில் சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அம்மானி தான்ஜி, முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அங்கொடா லொக்கா, இந்தியாவில் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை, கோவை சி.பி.சி.ஐ.டி, போலீசார் தேடி வந்தனர். அவர்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் அறிந்த, டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் பெங்களூரு விரைந்து செனறு, குள்ளப்பா சர்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த, இலங்கை, அதுரகிரியா என்ற பகுதியை சேர்ந்த சனுக்கா தனநாயகா(38), மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்( 46) ஆகியோரை கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றிரவு கோவைக்கு அழைத்து வநது நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் இல்லத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அழைத்து செல்லப்பட்டனர். இதில் அங்கொடா லொக்கா பயன்படுத்திய ஒரு கை துப்பாக்கி அவர்களிடம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து அந்த கை துப்பாக்கி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையும் படிங்க : அங்கொடா லொக்கா விவகாரம் குறி்த்து சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் விளக்கம்!