தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 8, 2021, 10:40 PM IST

ETV Bharat / city

புலியை பிடிப்பதில் சிக்கல் - அமைச்சர் ராமச்சந்திரன்

மழை உள்ளிட்ட நடைமுறை சிக்கல் காரணமாக மக்களை அச்சுறுத்தி வரும் புலியை பிடிப்பது சற்று சிரமமாக உள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராமச்சந்திரன்
அமைச்சர் ராமச்சந்திரன்

கோயம்புத்தூர்: வடகோவையிலுள்ள தமிழ்நாடு வனஉயிர் பயிற்சியகத்தில் வனத்துறை சார்பில் வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வனத்துறை உயரலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “அதிமுக ஆட்சியில் வன விலங்குகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை. 6 கோடி ரூபாய் வரையிலான தொகையை மக்களுக்குக் கொடுக்காத அரசாக அதிமுக அரசு இருந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக்கோரி முதலமைச்சர் அரசாணை வெளியிட்டுள்ளார். வன விலங்குகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படமால் இருக்க வனத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” என்றார்.

புலியை தேடும் பணி தீவிரம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மண் சார்ந்த மரங்களை மாவட்டம் தோறும் வளர்க்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. அயல்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தைலம் உள்ளிட்ட மரங்களை அகற்ற இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

டி23 புலியை பிடிக்க கேரளாவிலிருந்து வனத்துறையினரும் வந்துள்ளனர். புலியைக் பிடிக்கும்போது மழை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் வருவதால் சற்று சிரமமாக உள்ளது. புலி ஆரம்பத்தில் சுற்றித் திரிந்த இடமான தேவன் எஸ்டேட் பகுதியிலும் 30 வனத் துறையினர் புலியைத் தேடி வருகின்றனர்.

அறிவியல் பூர்வமாக தொழில்நுட்ப ரீதியில் உயர்ரக கேமராக்கள், ட்ரோன்கள் மூலமாகவும் புலியை தேடி வருகின்றனர். புலி வேறு இடத்திற்குச் சென்றுவிட்டதா என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணிப்புக் கேமரா மூலமாக கண்காணித்து வருகின்றனர். கூடிய விரைவில் புலியை பிடித்துவிடுவோம்” என தெரிவித்தார்.

சிறப்பாக பணியாற்றும் வனத்துறை

தொடர்ந்து பேசிய அவர், “சிங்கார காட்டுப் பகுதியில் வேறு புலிகளும் இருப்பதால் அதையும் கவனத்தில் கொண்டு தான் இந்த புலியை பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வனத்தையொட்டிய அரசு தரிசு நிலங்களில், வசிக்கின்ற மக்களின் கால்நடைகளை மேய்பதற்காக புற்கள் நடப்பட்டு கால்நடைகள் வனப்பகுதிக்குள் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது” என்றார்.

முன்னதாக வனவிலங்கு வார விழாவையொட்டி வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் வனத்துறையில் சிறப்பாக பணியாற்றிய வனத்துறையினருக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

இதையும் படிங்க:'புலி உறுமுது... புலி உறுமுது': T23 புலியைப் பிடிக்க 13ஆவது நாளாகத் தொடரும் பணி

ABOUT THE AUTHOR

...view details