கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திவருகின்றோம். தொடர் செயல்பாடுகளால் பல விருதுகளையும் பெற்று இருக்கின்றோம். சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருந்துவருகிறது. தொழில் செய்வதற்கும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
இவ்வாறான உகந்த சூழல் இருப்பதால் சமீபத்தில் நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு தொழில் தொடங்க தொழிலதிபர்கள் முன்வந்துள்ளனர்.
இது தற்போது தொடக்க நிலையில் உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அளித்த பொய்யான வாக்குறுதி மக்களிடம் எடுபடவில்லை. எதிர்க்கட்சியினர் மக்களிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளித்தார்கள், இதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.