கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தினசரி கோவை மாநகருக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் உயர்கல்விக்காகவும் வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கானோர் பேருந்தில் பயணித்துச் சென்று வருகின்றனர். அப்படிச் செல்லும் பயணிகள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவியும்போது பேருந்து பற்றாக்குறையால் பயணத்தின்போது படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர்.
பேருந்துகளும் அதிவேகமாகச் செல்லும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் அதில் அதிக அளவில் பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வதால் விபத்து ஏற்படும் நிலை உருவாவதாக அன்னூர் காவல்நிலையத்தில் சிலர் புகார் அளித்தனர். இதனையடுத்து இன்று காலை அன்னூர் காவல்நிலையம் முன்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதிவேகமாக வந்த பேருந்துகள் மற்றும் அதிகப் பயணிகளை ஏற்றிக்கொண்டு படிக்கட்டில் தொங்கியபடி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என அனைத்தையும் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.