கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து பாவு, நூல் வாங்கி அதனைக் காடா துணியாக உற்பத்தி செய்து கொடுக்கின்றனர்.
அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு வழங்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை தோல்வி
மேலும், கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
முன்னதாக, இது தொடர்பாக கடந்த ஆண்டு நவ.24ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் அதில் கலந்துகொண்ட மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் பல்லடம் ரகத்திற்கு 20 சதவீதமும், சோமனூர் இரகத்திற்கு 23 சதவீதமும் என்று கூலி உயர்த்தப்பட்டது.
வேலை நிறுத்தப் போராட்டம்
உயர்த்தப்பட்டக் கூலி உயர்வை இன்றுவரை கிடப்பில் போட்டுள்ள ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்து இந்தாண்டு ஜன.9 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், திருப்பூர், கோவை மாவட்டங்களில் கிட்டதட்ட 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், நாள் ஒன்றுக்கு ரூ. 60 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நேரடியாக இரண்டு லட்சமும் மறைமுகமாக 2 லட்சம் என 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில், இது தொடர்பாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
சூலூர் எம்எல்ஏ ஆதரவு
இதனைத் தொடர்ந்து ஜன.24ஆம் தேதியான இன்று காரணம்பேட்டையில் ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்து திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள மங்கலம், பல்லடம், சோனூர் ஆகிய பகுதிகளிலிருந்து 72 சங்கங்களைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கிட்டதட்ட 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்துக் கண்டனங்ளை எழுப்பினர். இவர்களுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினரும், சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கந்தசாமியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கூலி உயர்வு தொடர்பாக வரும் 27ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: காமாட்சியம்மன் கோயிலில் குவிந்த கூட்டம்!