கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் வருகிற 23ஆம் தேதி ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் மூன்றாமாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன், செயலாளர் தங்கவேலு, தமிழ்நாடு ரேக்ளா பேரவை தலைவர் அர்ஜூனன், மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் ஏற்பாட்டு பணிகளை பார்வையிட்டனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன், மூன்றாமாண்டு ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 23ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற உள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய கேலரி அமைத்து மக்களுக்கு தீங்கு இல்லாமல் இருக்க சீரும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளோம். மேலும் மக்களுக்கு தண்ணீர்,உணவு,பேருந்து வசதிகளை மாவட்ட நிர்வாகமே செய்துள்ளது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டு மாடுகளின் காளை கண்காட்சியும், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேலும் 750 முதல் 900 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் போட்டியில் கலந்துகொள்வார்கள். ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராட்டம் நடத்திய அனைத்து இளைஞர்களுக்கும் மதிப்பளித்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்றார்.