கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வன். 64 வயதான இவர் மாங்கரை அதன் சுற்றுவட்டார வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ப்பது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று (அக்.4) தனது கால்நடைகளை மேய்க்க சென்றுள்ளார்.
இதற்கிடையில் இரவு வெகுநேரமாகியும் பசுமாடு ஒன்று வீடு திரும்பாததால் அதனை தேடி வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த ஒற்றை யானை திடீரென செல்வனை தாக்கி தூக்கி வீசியுள்ளது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
யானை தாக்கி உயிரிழந்த செல்வன் இதனையடுத்து அவரை மீட்ட கிராம மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சம்பவ இடத்திற்கு சென்ற கோவை வனச்சரகர் சிவா, அங்குள்ள ஆதிவாசி மக்களிடம் இந்தச் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது, இரவு நேரங்களில் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது” எனவும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: லாரியை வழிமறித்து கரும்பை சாப்பிட்ட காட்டு யானை...!