தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உலக யானைகள் தினத்தில் யானைகளின் நிலை குறித்து அறிந்துகொள்வோம்

உலக யானைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிற நிலையில் தமிழ்நாட்டில் யானைகளின் நிலைமை குறித்து இந்த சிறப்புத் தொகுப்பில் காண்போம்

By

Published : Aug 12, 2022, 6:56 PM IST

உலக யானைகள் தினம்
உலக யானைகள் தினம்

சென்னை: நமது சுற்றுச்சூழல் அமைப்பில் யானைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எனினும், முன்பு இருந்தது போல யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக எந்த ஒரு செய்திகளும் வரவில்லை என்றாலும், வேட்டையாடுதல், வாழ்விட அழிப்பு, சட்டத்திற்கு புறம்பாக விளைச்சல் நிலங்களில் மின்வேலி அமைப்பது மற்றும் மனித - யானை மோதல்கள் போன்ற விஷயங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் வனத்துறை யானைகளை பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். யானைகள் கணக்கெடுப்பு ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. கடைசியாக 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் யானைகளுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 27,312 யானைகள் இருப்பது உறுதியானது.

அவற்றில் அதிகமாக கர்நாடகாவில் 6,049 யானைகளும், அஸ்ஸாமில் 5,719 யானைகளும், கேரளாவில் 5,706, தமிழ்நாட்டில் 2,761 யானைகள் இருப்பதும் தெரிய வந்தது.

கடந்த 23 ஆண்டுகளாக யானையைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் முனைவர் பா.ராமகிருஷ்ணன் யானைகளின் இறப்புக்கு முக்கியக் காரணம் குறித்து நம்மிடம் கூறினார். அதில், "யானைகளின் இறப்பு விகிதத்தைக் கண்டறிய 2017 முதல் 2020 வரை ஒரு ஆராய்ச்சி செய்தோம். இதில் தமிழ்நாட்டில் உள்ள 1,566 இறந்த யானைகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை 19 யானைகளின் பிரேதப் பரிசோதனை ஆய்வுக்கூடங்களில் பெற்றோம்.

மேலும், இதனை திறமையான கால்நடை மருத்துவர்களை வைத்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தோம். இந்த ஆராய்ச்சியில் யானைக்குட்டிகளின் இறப்புகள் அதாவது 1 முதல் 5 வயது வரை அதிகமாக இருந்தது. யானையின் குட்டிகளுக்குப் பிறக்கும் போதே நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாகவே இருக்கும்," என்றார்.

மேலும் கோடைகாலம் யானைகளுக்கு ஒரு பெரும் பிரச்னையாக இருக்கும். ஏனெனில் கோடைகாலங்களில் உணவுப் பற்றாக்குறையும் அதிக அளவில் இருப்பதால், யானைகள் தங்களது குட்டிகளுக்குப் போதுமான அளவு பால் கொடுக்க இயலாது. எனவே, 1 வயது முதல் 5 வயது வரை யானைக்குட்டிகள் உயிர் வாழ்வது சவாலாகவே இருக்கும் எனக் கூறினார். மேலும் 25 முதல் 30 வயதான யானைகள் குறிப்பாக ஆண் யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

யானை வழித்தடங்களை குறுக்கீடு செய்வதும், மேய்ச்சல் இடங்களில் களைச்செடிகள் ஊடுருவுதல் உள்ளிட்ட காரணங்களாலும் யானை இறந்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது. ஆண் யானைகள் தொடர்ந்து இறந்தால் பாலின விகிதம் குறைந்து யானையின் எண்ணிக்கை வரும் கால கட்டத்தில் குறையலாம் எனவும் அவர் எச்சரித்தார்.

வனவிலங்கு ஆராய்ச்சியாளர், கொ. அசோக சக்கரவர்த்தி நம்மிடம் கூறுகையில், "இன்றைய கால கட்டத்தில் மனித - யானை மோதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். குறிப்பாக யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் இந்த மோதல்கள் அதிகரிக்கின்றன.

உலக யானைகள் தினம்

இதனால் யானைகள் மனிதர்களின் வாழ்விடத்திற்குள் புகுந்து மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள்", என்றார். எனவே தமிழ்நாடு வனத்துறை, இதனில் கவனம் செலுத்தி யானைகளை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். "யானைகளை பாதுகாக்க வனத்துறை தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. இந்த ஆண்டு எடுக்கக்கூடிய கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் முந்தைய எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும்", என ஒரு வன அலுவலர் கூறினார்.

இதுகுறித்து வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு நம்மிடம் கூறுகையில், ’தமிழ்நாட்டில் யானைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். தற்போது 4 யானை காப்பகங்கள் உள்ளன. தென் தமிழ்நாட்டில் புதிய யானைகள் காப்பகத்தை விரைவில் அறிவிக்க உள்ளோம்.

மேலும் நாங்கள் தமிழ்நாட்டில் மனித-விலங்கு மோதல் மேலாண்மைச் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி ஆராய்ச்சி மேற்கொள்கிறோம். இதற்காக தாமதமின்றி இழப்பீடு வழங்குவதற்காக இந்த ஆண்டு ரூ.10 கோடியை அரசு முன்பணமாக வழங்கியுள்ளது.

சமீபத்தில் சுமார் ரூ. 489 கோடி செலவில் பாழடைந்த காடுகளை மேம்படுத்த நபார்டு திட்டத்தை அரசு பெற்றுள்ளது. காடுகளின் தரத்தை உள்ளே இருந்து மேம்படுத்த இது துறைக்கு உதவும். யானைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’ எனத் தெரிவித்தார்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின்படி, 2012ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களில் யானைகளின் எண்ணிக்கை 27,785 முதல் 31,368 வரை இருந்தது. கர்நாடகாவில் 7,458 யானைகள் இருந்த நிலையில், அஸ்ஸாமில் 5,281 யானைகள் இருந்தன, மகாராஷ்டிராவில் நான்கு யானைகள் மட்டுமே இருந்தன என குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 30 யானைகள் காப்பகங்கள் உள்ளன. இதில் 10 இடங்களில் சட்டவிரோதமான யானைகளைக் கொல்வதைக் கண்காணித்தல் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தனர். இந்த 10 இடங்களில் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரியும் ஒன்றாகும்.

இதையும் படிங்க:3 மாதங்களில் 10 யானைகள் உயிரிழப்பு... உண்மை காரணத்தை மறைக்க முயற்சிக்கிறதா வனத்துறை?

ABOUT THE AUTHOR

...view details