தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 10, 2022, 3:19 PM IST

ETV Bharat / city

மஞ்சள் தேமல் நோயால் பாதிக்கப்படும் சிறுதானிய பயிர்களைக் காக்கும் வழிகள்

நடப்பு கோடைப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயறு வகை பயிர்களில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மஞ்சள் தேமல்
மஞ்சள் தேமல்

சென்னை:நடப்பு கோடைப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயறு வகை பயிர்களில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறுதானியப் பயிர்களைப் பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் எட்டு லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயறுவகை பயிர்கள் குறிப்பாக உளுந்து, பச்சைப்பயறு, துவரை, தட்டைப்பயறு போன்ற பயறுவகைகள் சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன.

பயிர்கள் சாகுபடி

காரீப் பருவத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) சுமார் 30 விழுக்காடு, மீதமுள்ள 70 விழுக்காடு பயறுவகைப் பயிர்கள் ராபிப் பருவத்திலும் (அக்டோபர் முதல் மார்ச் வரை) சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன.

பயறு வகை பயிர்கள் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தருவதுடன், மண் வளத்தையும் பாதுகாக்கும் என்பதால், நடப்பாண்டில் சம்பா நெல் அறுவடைக்குப் பின்பு, பயறுவகைப் பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வதற்குத் தமிழ்நாடு அரசு சீரிய முயற்சிகளை எடுத்துள்ளது. இதுவரை, 1.6 லட்சம் ஹெக்டேர் உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்யப்பட்டு வளர்ச்சிப்பருவத்தில் உள்ளது.

மஞ்சள் தேமல் நோய்

தற்போது, பயறு வகைப் பயிர்களில், மஞ்சள் தேமல் நோய் (Yellow Mosaic Virus) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களில் முதலில் இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றி, பின்னர் இலை முழுவதும் திட்டுத் திட்டாக ஒழுங்கற்ற மஞ்சளும், பச்சையும் கலந்த பகுதிகளாக மாறும். சில சமயம், நோயுற்ற இலைகள் சிறுத்தும், சுருங்கியும் காணப்படும்.

நாளடைவில் மஞ்சள் நிறப்பகுதி அதிகமாகி, துளிர் இலைகள் முழுவதும் மஞ்சளாகிவிடும். நோயுற்றச் செடிகளில் குறைந்த எண்ணிக்கையில் காய் பிடிக்கும். சில சமயங்களில் காய்களும் விதைகளும் மஞ்சளாக மாறிவிடும். செடிகளின் இளம்பருவத்தில் நோய் தோன்றினால் செடிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டு, பெருமளவு மகசூல் இழப்பு ஏற்படும்.

கட்டுப்படுத்தும் வழிகள்

இந்த மஞ்சள் தேமல் நோயானது வெள்ளை ஈயினால் பரவக்கூடியது என்பதால், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு (IPM) முறைகளைப் பின்பற்றுவதே இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறையாகும்.

மஞ்சள் தேமல் நோய் தாக்குதலைத் தாங்கி வளரக்கூடிய வம்பன் 6, வம்பன் 7, வம்பன் 8 போன்ற உளுந்து ரகங்களையும், கோ 6 பாசிப்பயறு ரகத்தையும் சாகுபடி செய்ய வேண்டும்.

நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். பயறு விதைப்புக்கு நடுவில், ஏழு வரிசைக்கு ஒரு வரிசை சோளப்பயிரை தடுப்புப்பயிராக விதைத்தால், வைரஸைப் பரப்பும் பூச்சிகளைத் தவிர்க்கலாம்.

எக்டருக்கு 10 மஞ்சள் ஒட்டுப்பொறிகள் வீதம் வைத்து, அதில் ஒட்டும் பூச்சிகளை எளிதில் அகற்றலாம். விதைக்கும் முன் இமிடாகுளோப்ரிட் 600 FS என்ற மருந்தைக் கிலோவுக்கு 5 மிலி என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.

வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை அணுகலாம்

நோய்ப் பாதிப்பு தெரிந்தவுடன், இமிடாகுளோப்ரிட் 17.5 SL எக்டருக்கு 250 மிலி அல்லது டைமெத்தயோட் 30 EC 500 மிலி அல்லது தையோமீதாக்சம் 75 WG 100 கிராம் என்ற அளவில் காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

எனவே, நடப்புப் பருவத்தில் பயறுவகைப் பயிர்களைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த முறைகளைப் பின்பற்றி, மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மஞ்சள் தேமல் நோய் அறிகுறி ஏதும் தென்பட்டால் அருகில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அல்லது வேளாண் விரிவாக்க அலுவலர்களை அணுகி ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றித் தெரிந்துகொண்டு தங்கள் வயல்களில் பின்பற்ற வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும் - காவல் துறையினருக்கு எடப்பாடி எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details