தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 15, 2021, 5:46 PM IST

ETV Bharat / city

காலில் விழ வைத்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

விழுப்புரம் அருகே கிராம பஞ்சாயத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேர் காலில் விழுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதுதொடர்பாக ஒருதரப்பின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

villupuram dalith old man issue
காலில் விழ வைத்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் 3 பேர் காலில் விழுவது போன்ற புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் எஸ்.பி. ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'கடந்த 12ஆம் தேதி ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள காலனிப் பகுதியில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு முறைகளை மீறி, கோயில் திருவிழா நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீஸார், அரசின் உத்தரவைச் சுட்டிக்காட்டி திருவிழாவை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதால் திருவிழா நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அன்று மாலை அப்பகுதி இளைஞர்கள் சிலர், வேனில் இருந்தபடியே பாடும் இசைக் குழுவினரை வரவழைத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

இதனை அறிந்த போலீஸார், இசைக் கருவிகளை எடுத்துச் சென்றனர். இதையடுத்து காலனி தரப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸாரிடம், தங்களால் இசைக் குழுவினர் பாதிக்கப்படவேண்டாம் என்றும், அவர்களின் இசைக் கருவிகளைக் கொடுத்து விடுமாறும் கேட்டுக்கொண்டதால் அவற்றை போலீஸார் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

ஆனால், திருவிழாவுக்கு செய்த செலவு வீணாகி விட்டதாகவும், காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆதிக்க வகுப்பு இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக நடைபெற்ற கிராம பஞ்சாயத்தில், தாங்கள் செய்தது தவறுதான் என காலனியைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து காலனி தரப்பில் இருந்து பெரியவர்கள் 3 பேர், காலில் விழுந்து, இது போன்ற தவறுகள் நடக்காது என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ நேற்று (14ஆம் தேதி) வெளியானது. இதையடுத்து இரு தரப்பினரும் தனித்தனியே திருவெண்ணெய்நல்லூர் போலீஸில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஒரு தரப்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும், மற்றொரு தரப்பினர் கொடுத்துள்ளப் புகாரின் அடிப்படையிலும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details