தமிழ்நாடு

tamil nadu

மோசடி செய்த பணத்தை மீட்டுத்தர லஞ்சம் கேட்ட எஸ்ஐ கைது!

By

Published : Feb 13, 2021, 7:34 AM IST

சென்னை: வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த ரூ.12 லட்சம் பணத்தை வாங்கிக் கொடுக்க ரூ.15ஆயிரம் லஞ்சம் வாங்கிய அம்பத்தூர் எஸ்ஐ-யை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைதுசெய்தனர்.

எஸ்.ஐ கைது
எஸ்.ஐ கைது

அம்பத்தூர், இளங்கோ நகரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (42). இவர், தனியார் வேலைவாய்ப்பு நிலையம் நடத்திவருகிறார். 2019ஆம் ஆண்டு ஆனந்தராஜிக்கு, தாம்பரம் அருகே படப்பையைச் சேர்ந்த கலா என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அலுவலராக உள்ளார்.

இவர் தனக்கு விமான நிலைய அலுவலர்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும், அங்கு தற்காலிகமாக பணியாற்றும் 24 இளைஞர்களை நிரந்தமாக்குவதாக ஆனந்தராஜிடம் கூறியுள்ளார். மேலும், அவர் ரூ.12 லட்சம் பணத்தை எனக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய ஆனந்தராஜ் அவரிடம் 24 பேரிடம் பணம் வாங்கி ரூ.12லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் வேலை வாங்கி தராமலும், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து ஆனந்தராஜ் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரை விசாரிக்க அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, எஸ்ஐ தமீம் வழக்கை விசாரணை செய்து வந்தார். மேலும், அவர் கலாவிடம் இருந்து பணம் வாங்கி தருவதற்கு ஆனந்தராஜிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

அதனை கொடுக்க விரும்பாத ஆனந்தராஜ், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து டிஎஸ்பி குமரகுரு தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

பின்னர், காவல் துறையினர் ஆலோசனையின்படி, ரசாயன பவுடர் தடவிய லஞ்ச பணத்தை ஆனந்தராஜ் நேற்று (பிப். 12) மாலை எடுத்துக்கொண்டு அம்பத்தூர் காவல் நிலைய வளாகத்தில் இருந்த எஸ்ஐ தமீமிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி குமரகுரு தலைமையிலான காவல் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் காவல் துறையினர் எஸ்ஐ தமீமை கைதுசெய்து லஞ்ச வாங்க வேறு அலுவலர்கள், காவல் துறையினர் உடந்தையாக உள்ளனரா என விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details