ஸ்டெர்லைட்ஆலை தொடக்கம்:
- 1993ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதனால் அங்கு எதிர்ப்புக் கிளம்பியதால் வேறு இடத்திற்கு மாற்றத் திட்டமிடப்பட்டது.
- 1994ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஆலையை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. நாளடைவில் ஆலை அமைக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகளவில் உடல் நிலை மோசமடைந்ததால் தேசிய அறக்கட்டளை என்ற அமைப்பு 1996ஆம் ஆண்டு ஆலையை மூடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
சட்டப் போராட்டங்கள்:
- அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 1998ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
- அதனால் 1998ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆலையை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஆலை இயங்க அனுமதி பெற்றது.
- அதன்பின் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டி, ஆலையை மூடும்படி உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ரூ. 100 கோடி இழப்பீடு:
- 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் விஷவாயு கசிவு காரணமாக பலர் பாதிப்படைந்தனர், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. அதனால் ஆலையை மூட உத்தரவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாகவும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடாகவும் 100 கோடி ரூபாயை வழங்க ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
13 பேர் உயிரிழப்பு:
- மீண்டும் 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஆலையில் பணிகள் நடப்பதாக எழுந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
- அதன் விளைவாக 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி காற்றையும், நீரையும் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டது.
- அந்த ஆண்டே அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்தது.
- அந்த அறிக்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதேபோல ஆலையைத் திறக்க அனுமதி கோரி, ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுதாக்கல் செய்தது.
பசுமை தீர்ப்பாயம் உத்தரவு ரத்து:
- அதில் உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்து, வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.