இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவர் முந்திரி வணிகம் செய்து வந்தார். அக்டோபர் 28 அன்று வடலூர் சென்ற செல்வமுருகன் வீடு திரும்பாத நிலையில், அவரது மனைவி பிரேமா அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. இதையடுத்து, வடலூர் காவல் நிலையத்தில் பிரேமா புகார் கொடுத்தார். ஆனால், நெய்வேலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
அங்கு சென்ற பிரேமாவையும், அவரது குழந்தைகளையும் காவலர்கள் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டனர். அங்கிருந்து பிரேமா வீடு திரும்பும் வழியில், ஆய்வாளர் ஆறுமுகம், காவலர்கள் சுதாகர், அறிவழகன் மற்றும் அடையாளம் தெரிந்து காவலர் ஒருவர் பிரேமாவை வழிமறித்து விசாரித்தனர். மேலும், உனது கணவர் மீது பல வழக்குகள் இருப்பதாக கூறினர்.
மறுநாள் காலையில் பிரேமாவை தொடர்பு கொண்ட காவலர்கள், இந்திரா நகரில் உள்ள ராணி & ராணி என்ற தங்கும் விடுதிக்கு வரச் சொன்னார்கள். குழந்தைகளுடன் சென்ற பிரேமாவிடம் உனது கணவர் செல்வமுருகன் மீது திருட்டு வழக்கு உள்ளது. 10 சவரன் தங்க நகை கொடுத்துவிட்டால், வழக்குப் பதியாமல் விட்டு விடுகிறோம் என்று மிரட்டியுள்ளனர்.