இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் நேற்று திருநெல்வேலியில் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
'முன்னாள் மேயர் மகேஸ்வரி படுகொலை தமிழ்நாட்டுக்கே அதிர்ச்சி' - வைகோ இரங்கல்! - vaiko statement
சென்னை: திருநெல்வேலி திமுக முன்னாள் மேயர் மகேஸ்வரி படுகொலை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்தக் கொலைகள், திருநெல்வேலி மாவட்டத்தை மட்டும் அல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ஆகப் பொறுப்பு வகித்த காலத்தில், நற்பெயர் ஈட்டியவர் உமாமகேஸ்வரி. எளிமையான அணுகுமுறை. எந்த நேரமும் மக்கள் அவரைச் சந்திக்க முடியும் என்கிற அளவுக்கு எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவரும் அவரது கணவரும் என் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள்.
அண்மைக்காலத்தில் தமிழ்நாடு முழுமையும் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்து இருப்பது பெரும் கவலை அளிக்கின்றது. உமா மகேஸ்வரியைக் கொலை செய்தவர்களை உடனடியாகப் பிடித்து, தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்படுகொலைகளால் துயருறும் உற்றார் உறவினர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம், என்று தெரிவித்துள்ளார்.