தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

சென்னையில் பெண்களுடன் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டி தொழிலதிபரிடம் 50 லட்ச ரூபாய் பறித்த இரண்டு பைனான்சியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

By

Published : Dec 17, 2021, 8:16 AM IST

தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது
தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

சென்னை: தி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அதே பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங்மால் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு வேறு ஒரு நண்பர் மூலமாக கரூரை சேர்ந்த ராஜேஷ், கார்த்திக் ஆகிய இருவரும் அறிமுகமாகி உள்ளனர்.

இவர்கள் இருவரும் பைனான்ஸ் தொழில் செய்து வருவதாகவும், அதிகப்படியான பணம் வருவதால் ஜாலியாக செலவு செய்து வருவதாகவும் தொழிலதிபரான ராஜாவை நம்ப வைத்துள்ளனர். மேலும் தொழிலதிபர் ராஜாவிற்கு மாதந்தோறும் பல கோடி ரூபாய் வருமானம் வருவதை தெரிந்து கொண்ட ராஜேஷ் மற்றும் கார்த்திக், ராஜாவை குறிவைத்து சிக்க வைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் திநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டி ஒன்றிற்கு தொழிலதிபர் ராஜாவை ராஜேஷ் மற்றும் கார்த்திக் வரவழைத்துள்ளனர். மேலும் பிரபல நடிகர், நடிகைகளும் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பார்ட்டியில் அதிக அளவில் மது பரிமாறபட்டதன் விளைவாக ராஜாவை அதிக மது அருந்த வைத்துள்ளனர்,மது போதை அதிகமானதால் ராஜா தன் வீட்டிற்கு செல்வதாக கூறி உள்ளார்.

ஆனால் ராஜா அதிகமான போதையில் இருந்ததால் நட்சத்திர விடுதியில் இருவரும் வற்புறுத்தி தங்க வைத்துள்ளனர். பார்ட்டியில் ஏற்கனவே சில பெண்களை தங்களது நண்பர்கள் என அறிமுகம் செய்துவைத்த ராஜேஷ் மற்றும் கார்த்திக், ராஜா தங்கியிருந்த அறைக்கு அந்த பெண்களை வரவழைத்துள்ளனர். அதிக மதுபோதையில் இருந்த ராஜாவிற்கு அதன்பின் என்ன நடந்தது என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செப்டம்பர் மாதம் ராஜேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் ராஜாவிற்கு போன் செய்து அவர் பெண்களுடன் உள்ள ஆபாச படம் மற்றும் வீடியோக்களை குடும்பத்தினரிடம் காண்பித்து விடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் தங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் தரவில்லை என்றால் உடனடியாக இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர்.

இதனால் அச்சமடைந்த ராஜா உடனடியாக 50 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து வைத்திருப்பதாகவும், அதை வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ராஜேஷின் ஓட்டுநர் மோகன் என்பவர் பணத்தை பெற தி நகரில் உள்ள ராஜா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராஜா சமயோசிதமாக அவரது செல்போனில் ஓட்டுனரிடம் பணம் கொடுக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

மூன்றரை கோடி ரூபாய் பணம் வேண்டும் எனவும், அவ்வாறு பணத்தை தரவில்லை என்றால் தங்களுக்கு கூலிப்படையினரை தெரியும் எனவும் ராஜாவும் அவரது குடும்பத்தாரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளனர். இதனால் மேலும் பதற்றமடைந்த ராஜா காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

அதன் பேரில் பாண்டி பஜார் காவல்துறையினர் ராஜேஷ், கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜாவிடம் இருந்து பறித்த 50 லட்சம் ரூபாய் பணம், ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்யும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆசை வார்த்தை கூறி சிறுவர்களிடம் ரூ.8 லட்சம் மோசடி: பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details