சென்னை: கல்வியியல் கல்லூரி உதவிப்பேராசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் இடத்தினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் 2331 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி பெறப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களில் கல்வியியல், உடற்கல்வி அறிவியல் (கல்வியியல்), வரலாறு(கல்வியியல்), உயிரியல் அறிவியல் (கல்வியியல்) பாடப் பிரிவுகளில் விண்ணப்பித்தவர்களுக்கு இந்த ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்க்கும் இடம் நேரம் மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து விபரங்கள் விண்ணப்பத்தின் பொழுது அவர்கள் அளித்த ஈமெயில் முகவரி மற்றும் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டதால் தகுதி பெற்றவர்களாகமாட்டார்கள்.
கல்வியியல் பாடப் பிரிவில் விண்ணப்பம் செய்துள்ள 1073 தேர்வர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி மாநிலக் கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.