தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 1, 2021, 6:27 AM IST

ETV Bharat / city

அரசு அலுவலர்களுக்கு பணித்திறன் உயர்த்தும் பயிற்சிகள் - முதலமைச்சர் அறிவுறுத்தல்

அரசு அலுவலர்களின் பணித்திறன் உயர்த்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Trainings to enhance the performance of government officials cm Stalin
Trainings to enhance the performance of government officials cm Stalin

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரசு அலுவலர்களுக்குச் சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம், அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, அதன்மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், போட்டித் தேர்வுகளில் நமது மாநில மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறும் வண்ணம் பல்வேறு வகைப்பட்ட சிறப்புப் பயிற்சிகளை வடிவமைத்து, அரசு பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டுப் மாணவர்களிடையே, மாநில மற்றும் ஒன்றிய அரசுப்பணிகள் தொடர்பான போட்டித் தேர்வுகள் / தகுதிகள் / தேவையான பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்தவும் முதலமைச்சர் கூறினார்.

உலக தாய்ப்பால் வாரம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மேலும், குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள் மூலம் அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கவும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனைத்துத் துறைகளிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டார்.

அரசு அலுவலர்களின் மனிதவள ஆற்றலினை மேம்படுத்தவும், பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பினைப் பெருக்குவதற்கும், அண்ணா மேலாண்மைப் பயிற்சி மையம் மற்றும் போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளை உயர்த்திடவும் அவர் ஆலோசனை வழங்கினார்.

பவானிசாகரில் உள்ள அடிப்படைப் பயிற்சி மையத்தால் அரசுப் பணியாளர்களுக்கான பயிற்சியினைக் காணொலிக் காட்சி வாயிலாக இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்தலாம் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் .ச.கிருஷ்ணன், மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details