சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, "தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகள் கடந்த 5 மாதங்களாக மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஒன்றரை மாதங்களாக ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், ஆய்வுக்குழுவினர் சிறிய, சிறிய குறைபாடுகளை தெரிவித்தனர். அச்சிறிய அளவிலான குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, மருத்துவக் கல்வி இயக்குநரை மூன்று முறை டெல்லிக்கு அனுப்பி தெரிவிக்கப்பட்டது.
ஒன்றிய அரசின் இந்த மருத்துவக் கல்லூரிகளில், இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரிடம் கடிதத்தின் மூலமாகவும், நேரிலும் வலியுறுத்தினார். மூன்று முறை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை நானும், மருத்துவதுறையின் செயலாளர் மற்றும் அலுவலர்களோடு சென்று வலியுறுத்தியுள்ளோம்.
தொடர் முயற்சியின் காரணமாக 850 மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 150 மாணவர்கள் வீதம், 450 இடங்களுக்கும், ராமநாதபுரம், நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 100 இடங்கள் வீதம் 400 இடங்களுக்கும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நானும், மருத்துவத் துறையின் செயலாளர் மற்றும் துறையின் அலுவலர்களோடு ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சரை சந்தித்து மீதமுள்ள 800 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு ஒன்றிய அரசிடமிருந்து கிருஷ்ணகிரி, அரியலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 150 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.