தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2020, 1:06 PM IST

ETV Bharat / city

பாதுகாப்பின்மையால் இந்தியாவை விட்டு வெளியேறும் தமிழ்நாட்டின் கடைசி யூதக் குடும்பம்!

கடந்த 4 நூற்றாண்டுகளுக்கு முன்னர், மத துன்புறுத்தல்கள் காரணமாக ஐரோப்பாவிலிருந்து வெளியேறி, பாதுகாப்புத்தேடி சென்னையில் தஞ்சமடைந்த யூத சமூகத்தின் கடைசி குடும்ப வாரிசுகள், தமிழ்நாட்டின் மூத்த காவல் துறை அலுவலர் குடும்பத்தின் இடையூறுகளால் தங்களது குடியுரிமையை விட்டுக்கொடுத்து, இந்தியாவை விட்டு வெளியேறத் தயாராகி வருகிறது.

last-jewish-family
last-jewish-family

சென்னை : சென்னை தான் பாதுகாப்பான இடம் என நம்பி வந்த யூத குடும்பம் ஒன்றிற்கு அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது கடந்த ஜூன் மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம். சென்னை - பெசன்ட் நகரில் வசித்து வரும், யூத வம்சாவளியைச் சேர்ந்தவர், டேவிட் லீவி (42); கப்பற்பொறியாளர். இவரது வீட்டில் வாடகைக்கு இருந்த தமிழ்நாட்டின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் மகன் மற்றும் அரசியல்வாதியின் மகன் ஆகிய இருவரின் இடையூறுகளால், டேவிட்டின் குடும்பத்தை சென்னையை விட்டு வெளியேறும் முடிவை எடுக்கச் செய்திருக்கிறது.

கேட்டரிங் தொழில் நடத்துவதாகக்கூறி, டேவிட்டின் வீட்டை வாடகைக்கு எடுத்தித்திருந்த, பெரிய இடத்துப் பிள்ளைகள், அங்கே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதை அறிந்ததும், அவர்களிடம் வீட்டை காலி செய்யுமாறு டேவிட் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெரிய இடத்துப் பிள்ளைகள், டேவிட்டை மிரட்டி, ஆள் வைத்து அடித்துள்ளனர்.

இந்த அரசியல், அதிகார அராஜக செயலால், இந்திய குடியுரிமை பெற்றவரான டேவிட், குடும்பத்துடன், தங்களின் குடியுரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு, இந்தியாவிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளார். டேவிட், ஜெர்மன் செல்லத் தயாராகி வர, இவரது குடும்பத்தினர் ஏற்கெனவே அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் குடியேறிவிட்டனர்.

"அந்தத் தாக்குதலுக்கு பின்னர், என் மனைவியும் இரண்டு குழந்தைகளும் அமெரிக்க துணை தூதரகத்தில் தான் தங்கியிருந்தனர். தாக்கப்பட்டு தலையில் ரத்தம் வடியும் என்னுடைய காணொலி ஒன்று சமூக வலைதளத்தின் மூலம் உலகெங்கிலும் வாழும் யூதர்களின் பார்வையில் பட, அவர்கள் எங்களை இங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான நாட்டில் குடியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்" என தனது முடிவுக்கான காரணத்தை விவரிக்கும் டேவிட், "என் குடும்பத்தினர் தங்களின் இந்திய குடியுரிமையை விட்டுவிட்டு, பல்வேறு நாடுகளில் குடியேறிவிட்டனர். நான் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நானும் வெளியேறிவிடுவேன்" என்கிறார்.

யூத இனஅழித்தொழிப்பில் பாதிக்கப்பட்டப்பட்ட டேவிட்டின் முன்னோர்கள், அங்கிருந்து வெளியேறி சென்னைக்கு தஞ்சம் தேடி வந்துள்ளனர்.

சென்னையில் வெள்ளையர் ஆட்சியில் தொடங்கி, தற்போதைய கழகங்களின் ஆட்சி வரை தமிழ்நாட்டின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது, டேவிட்டின் குடும்பம். வைர வியாபாரிகளான டேவிட்டின் முன்னோர்கள், அப்போதைய பிரிட்டிஷ் அதிகார மையத்துடன் நெருக்கமாக இருந்துள்ளனர். டேவிட்டின் பாட்டி 'ரேச்சல் ஹலேவி கோஹன்', சென்னை ஐஐடியில் இயற்பியல் பாடம் பயிற்றுவித்துள்ளார். இவர் பெசன்ட் நகர் ஐசக் தெருவில் இருந்த யூதர்களின் வழிபாட்டு ஆலயம் அழித்தொழிக்கப்பட்டபோது, புதிய ஆலயம் கட்டுவதற்கான முன்னெடுப்புகளையும் செய்திருக்கிறார்.

கோரல் மெர்சென்ட் தெருவிலுள்ள 7ஆம் எண் கட்டடத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட போது, அதே கட்டடத்தில், டேவிட்டின் முன்னோர்களும் வசித்திருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர், அண்ணா அவர்களது அண்டை வீட்டில் வசித்துள்ளார்.

திமுக, அதிமுகவினரிடையே தங்களுக்கு மிகவும் நெருக்கம் உண்டு எனக் கூறும் டேவிட், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்னுடைய மகளுக்குப் பெயர் வைத்தது எனவும் நினைவு கூறுகிறார்.

'எனது தாய் சாரா, தான் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வந்து, எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் தன் மீதிக்காலத்தை கழிக்கலாம் என நம்புகிறார்' என்கிற டேவிட்டின் குரலில் தொனிக்கிறது, வாழ்ந்து செழித்த ஊரில் நிர்கதியாக்கப்பட்ட விரக்தியின் வலி.

வந்தாரை வாழ வைத்த தமிழ்நாடு என மார்தட்டிய பூமி, இன்று அரசியல், அதிகார அடக்குமுறையால் தன்னை அண்டிவந்தவர்களை நிர்கதியாக்கி விரட்டி விடுவது காலத்தின் கோலம்.

இதையும் படிங்க :முகக் கவசம் அணியவில்லை: கேள்வி கேட்ட காவலரை காரில் இழுத்துச் சென்றவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details