டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2A தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் பல தேர்வர்கள் இடைத்தரகர்கள் மூலம் பணம் செலுத்தி தேர்ச்சியடைந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள்தான் முறைகேட்டில் அதிகளவில் ஈடுபட்டிருப்பதாக குரூப்-4 தேர்வில் 99 பேரும், குரூப்-2A தேர்வில் 42 பேரும் முறைகேடு செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நடத்திய விசாரணை மூலம் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கக்கோரி டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் பரிந்துரைத்ததையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் தொடர்ந்து நடத்திவரும் விசாரணையில் இதுவரை குரூப்-4, குரூப்-2A தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த டிஎன்பிஎஸ்சி அலுவலர் ஓம்காந்தனை நீதிமன்ற காவலில் இருந்து ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவரை ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களுக்கு அழைத்துச் சென்று முறைகேடு எப்படி அரங்கேற்றப்பட்டது என்பதை வீடியோவாகப் பதிவு செய்து ஆதாரங்களைத் திரட்டிவருகின்றனர்.
இதே வேளையில் இந்த முறைகேட்டிற்கு மூளையாகச் செயல்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இதனிடையே நேற்று இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து மாஜிஸ்திரேட் கவுதமன் அவரை ஒருநாள் நீதிமன்ற காவலில் வைத்து இன்று எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமார், இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மாஜிஸ்திரேட் பத்து நாள் போலீஸ் காவலில் செல்ல விருப்பமா என ஜெக்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், தனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை எனவும் தன்மீது பொய்யாக வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார். மேலும், போலீஸ் காவலுக்கு ஜெயக்குமாரை அனுமதிக்கக்கூடாது எனவும் ஜெயக்குமார் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.