தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 13, 2019, 7:40 PM IST

Updated : Oct 14, 2019, 12:19 PM IST

ETV Bharat / city

சத்துணவு மானியத்தை உயர்த்திதரக் கோரிக்கை!

சென்னை: எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவில் புதிய வகை கலவைச் சாதங்களுக்கான உணவு மானியம் ஐந்து ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பேயத்தேவன் வலியுறுத்தியுள்ளார்.

சத்துணவு

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவினை மாணவர்கள் விரும்பி உண்ணும் வகையிலும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சத்தான உணவுடன் மேலும் அவர்களுக்கு சத்தினை அதிகரிக்கும் வகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மதிய உணவுத் திட்டத்தில் சில மாற்றங்களை அறிவித்தார்.

அதன்படி கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, கறுப்புக் கொண்டை கடலை, தக்காளி, கருவேப்பிலை, கீரை உள்ளிட்ட சாதங்கள் எனப் பல வகையான சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமூக நல ஆணையர் ஆபிரகாம் சத்துணவுத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்யலாமா? என்பது குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் கருத்து கேட்டுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பேயத்தேவன் கூறியதாவது, "சத்துணவுத் திட்டம் 1982ஆம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவுத் திட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அதேபோல் ஓய்வூதியத் தொகையை ஒன்பதாயிரம் ரூபாயாக வழங்கவும், மேலும் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த உள்ளோம்.

சத்துணவுத் திட்டத்தில் புதிய வகை உணவுத் திட்டம் 2014ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு, உணவு செலவு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அப்போது வழங்கிய உணவு மானியத்தை மட்டுமே தற்போது வழங்கி வருகிறார்கள். ஒரு மாணவருக்கு புதிய வகை கலவை சாதங்கள் வழங்குவதற்கு உணவு மானியத்தை ஐந்து ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சத்துணவுத்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உணவு மானியம் உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் உணவு மானியத்தை உயர்த்தி வழங்குவதற்காக 98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது வரை உயர்த்தப்பட்ட நிதியை வழங்கவில்லை. தொடர்ந்து வழங்கப்படும் கலவைச் சாதத்தில் சமூக நலத் துறையால் வழங்கப்பட்ட கையேட்டின் அடிப்படையில் உணவுப் பொருட்கள் வழங்குவது இல்லை. இதனால் மாணவர்களுக்குச் சுவையான உணவினை தயாரித்து அளிக்க முடியவில்லை.

தற்போது கிராமப்புறங்களில் வீட்டிலேயே சுவையான உணவை மாணவர்களுக்குத் தயாரித்து அளிக்கின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்குச் சுவையற்ற உணவுகள் வழங்கும்போது அதனை உண்பதற்கு சிரமப்படுகின்றனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பேயத்தேவன் பேட்டி

மாணவர்களுக்கு வழங்கும் பிரியாணி, கொண்டைக்கடலை புலாவு போன்றவற்றை மாற்றம் செய்ய வேண்டும் எனக் கருதி சமூக நல ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகக் கருதுகிறேன். அவ்வாறு செய்யும்போது செலவு கூடுதலாக வாய்ப்புள்ளது. எனவே உணவு மானியத்தை வழங்க முயற்சி வேண்டும்" என தெரிவித்தார்.

தற்போதிய செய்திகள்:

'அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை' - நடிகை குஷ்பூ!

நாங்குநேரி பரப்புரை - தூத்துக்குடிக்குச் சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!

Last Updated : Oct 14, 2019, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details