தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 24, 2020, 4:16 PM IST

ETV Bharat / city

"கரோனாவைவிட கொடூர அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது" - மு.க. ஸ்டாலின் சாடல்

சென்னை : நீலகிரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்துப் பேசிய மு.க. ஸ்டாலின், கரோனாவைவிட கொடூர அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது என்று அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

MK Stalin
MK Stalin

நீலகிரி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவட்டக் கழக அலுவலகமான உதகை - கலைஞர் அறிவாலய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை, திமுக தலைவர் மு.ஸ்டாலின் இன்று (ஆக. 24) காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்

அப்போது பேசிய அவர், "நீலகிரி மாவட்ட திமுக அலுவலகமான ‘கலைஞர் அறிவாலயத்தில்’, பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகில் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன். அங்கே வந்து திறந்து வைக்கக் கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கிறதே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், கருணாநிதியின் சிலையைத் திறந்து வைப்பது எனக்குக் கிடைத்த மாபெரும் பெருமை!

வங்கக் கடலோரம் பேரறிஞர் அண்ணாவுக்கு அருகில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு, கடல் மட்டத்திலிருந்து ஏழாயிரத்து 374 அடி உயரமுள்ள உதகையில் சிலை அமைக்கப்படுகிறது. கடற்கரையில் துயில் கொண்டிருப்பவருக்கு, மலையரசியின் மடியில் சிலை அமைக்கப்படுகிறது. இது கருணாநிதிக்கு மட்டும் கிடைத்த பெருமை அல்ல, நமக்கெல்லாம் சேர்த்து கிடைத்த பெருமை!

அவர் திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்தவராக இருந்தாலும், இந்தத் தாய்த் திருநாட்டின் குழந்தை அவர். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என வாழ்ந்தவர் அவர். தலைவர் கருணாநிதி முதன்முறை முதலமைச்சரானபோது எல்லாத் துறைகளையும் வளர்த்தெடுத்தார். அதில் சுற்றுலாத் துறையும் ஒன்று. சுற்றுலாத் தலமாக இருக்கக்கூடிய உதகை மீது சிறப்பு கவனம் செலுத்தினார்.

உதகை ஏரியை தூர்வாரி, மின் விளக்குகள் அமைத்து, பூங்காக்கள் அமைக்க, முதலைமைச்சர் கருணாநிதி 1970ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்தார். அதில் இருந்துதான் உதகை ஏரி புத்துயிர் பெற்றது. அதேபோல், உதகையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாளிகை கட்டுவதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்தார்கள். முதுமலை சரணாலயத்தை விரிவுபடுத்துவதற்காக மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை கொடுத்ததும் தலைவர் ஆட்சியில்தான்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் மூண்டபோது - ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாடு திரும்பினர். அப்போது, அந்த மக்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று நினைத்தார் கருணாநிதி! இலங்கையில் இருந்து திரும்புபவர்கள், தேயிலைத் தோட்டத் தொழில் தெரிந்தவர்கள் என்பதால், 1970ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர், கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் அவர்களைக் குடியமர்த்தினார்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில், நீலகிரியில் தொடர்வதற்குக் காரணமாக இருந்தவரும் கருணாநிதிதான். 1970ஆம் ஆண்டு ஊட்டி மலை ரயில் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, அதை முற்றாக நிறுத்திவிட அன்றைய மத்திய அரசு முடிவு செய்தது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அந்த நஷ்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும், ரயில் சேவையை நிறுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார். அதனால்தான், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மலை ரயில் சேவை இன்று வரை நீடிக்கிறது.

நீலகிரியில் பிரதான தொழில் தேயிலை உற்பத்திதான். அந்தத் தொழிலாளர்களுக்கும் கருணாநிதிக்கும் எப்போதுமே இனம்புரியாத ஒரு நேசம் இருந்து கொண்டே இருக்கும். 2008ஆம் ஆண்டில் தேயிலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உரிமையாளர்கள் நாட்கூலியாக 88 ரூபாய் தான் தரமுடியும் என்றனர். ஆனால் தொழிலாளர்கள் 90 ரூபாய் கேட்டனர். அரசு 89 ரூபாய் நிர்ணையித்திருந்தது. பேச்சுவார்த்தைக் குழுவினர் மூலம் இது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கவனத்திற்கு வரவே, அவர் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 102 ரூபாய் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.

ஊட்டியில் பெரும்பான்மையாக வாழும் படுகர் சமூகத்தில் ஒரு பிரிவாக இருக்கும் துறையர் சமூகத்தினர், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அதனை நிறைவேற்றியவர் தலைவர் கருணாநிதி.

இன்றைக்கு படுகர் சமூகத்தில் இருந்து முதல் ஐ.ஏ.எஸ் அலுவலர் உருவாகி இருக்கிறார் என்றால், அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த சீர்திருத்தமும் ஒரு காரணம். யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மல்லிகா என்ற பெண்ணை நானே தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்னேன். கருணாநிதி கொடுத்த இடஒதுக்கீடும் திமுகவின் சமூகநீதியும் தான் தனது வளர்ச்சிக்கு காரணம் என்று அந்தப் பெண் சொன்னார்.

மறைந்தும் மறையாமல் இருந்து இப்படி எத்தனையோ பேரை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார் தலைவர் கருணாநிதி. இப்படி இந்த மாவட்டத்துக்கு முதலமைச்சர் கலைஞர் செய்த உதவிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு முதலமைச்சர், தாயுள்ளத்தோடு இருக்க வேண்டும் என்று அவர் ஒருமுறை சொன்னார். “அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பார்கள். ஆனால் அழாத பிள்ளைக்கும் பால் தரும் பொறுப்பு தாய்க்கும் உண்டு, இந்த அரசுக்கும் உண்டு. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையையும் தட்டி எழுப்பி பால் தருவாள். அந்த அளவுக்கு பரிவு மிக்க தாய்தான் இந்த அரசாங்கம்” - என்று தனது ஆட்சிக்கான இலக்கணத்தை அவர் சொன்னார்.

அப்படித்தான் அவர் ஆட்சி செலுத்தினார். அதனால் தான் அவரை இந்த உலகம் இன்னும் வாழ்த்திக் கொண்டு இருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஒரு அரசு இருக்கிறது. அழுத பிள்ளையைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை, அழாத பிள்ளையைப் பற்றியும் கவலைப்படவில்லை. உணவு தராமல், பட்டினி போட்டு எல்லாப் பிள்ளைகளையும் கதறி அழவைக்கும் அரசாக இது இருக்கிறது.

பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் ஆட்சியாக இருக்கிறது. பிள்ளைகளை மட்டுமல்ல, தாய் தந்தையரையும் சித்ரவதை செய்யும் அரசாக இருக்கிறது. மொத்தத்தில் இது கரோனாவை விட கொடூர அரசாக இருக்கிறது. இரக்கமே இல்லாத அரசாக இருக்கிறது.

நீலகிரியில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டதும், அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும், நான் உடனே வந்து பார்வையிட்டேன். ஆறுதல் சொன்னேன். திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கினோம். ஆனால் முதலமைச்சர் வரவில்லை! மக்களைச் சென்று சந்திப்பது தன்னுடைய பணியல்ல என்று நினைக்கிறார் முதலமைச்சர். அவர் முதலமைச்சர் ஆவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. அதனால் அவரும் மக்களை மதிப்பது இல்லை!

இருக்கும் கொஞ்ச காலத்தில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓட நினைக்கும் ஒரு கூட்டத்திடம் கோட்டை சிக்கிக் கொண்டுள்ளது. இவர்களிடம் இருந்து கோட்டையையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய மாபெரும் கடமை நமக்கு இருக்கிறது.

“கொடியவர்களிடம் இருந்து கோட்டையை மீட்போம். கொள்ளையர்களிடம் இருந்து மக்களை மீட்போம்” என்ற உறுதிமொழியை கருணாநிதி சிலை முன் எடுப்போம். மலையில் உள்ள தலைவர் கருணாநிதி சிலையின் முன் சபதம் எடுத்து, கடற்கரையில் உள்ள தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றியை சமர்ப்பிப்போம்!" என்று பேசினார்.

இதையும் படிங்க: எஸ்.பி.பி தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்!

ABOUT THE AUTHOR

...view details