தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 15, 2020, 4:48 AM IST

ETV Bharat / city

கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்இடி வீடியோ வாகனங்கள் சேவை தொடக்கம்!

சென்னை: பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 சிறிய அதிநவீன எல்இடி வீடியோ வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்இடி வீடியோ வாகனங்கள் சேவையை தொடக்கி வைத்த முதலமைச்சர்!
விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்இடி வீடியோ வாகனங்கள் சேவையை தொடக்கி வைத்த முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி நேற்று (ஆக. 14) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 சிறிய அதிநவீன எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

மேலும், சென்னை பெருநகரில் 10 லட்சம் இல்லங்களுக்கு மூன்று கட்டங்களாக 30 லட்சம் இல்லங்களுக்கு கரோனா, டெங்கு, மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் பணி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய ஒரு லட்சம் நபர்களுக்கு கைப்பேசி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தல், நேப்பியர் பாலம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மாறும் வண்ண விளக்குகள் ஆகியவற்றை தொடக்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 38ஆயிரத்து 198 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரி சேகரிக்கும் மையங்கள், 10 நடமாடும் மையங்கள், என மொத்தம் 54 மையங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி, வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட நபர்களின் இல்லங்களுக்கே சென்று கரோனா தொற்று பரிசோதனைகள் செய்ய ஏதுவாக 50 ஆட்டோக்கள் மூலமாகவும், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை எட்டு லட்சத்து 21ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிக பரிசோதனைகள் மேற்கோண்ட பெருநகரங்களில், பெருநகர சென்னை மாநகராட்சி முதலிடம் வகிக்கிறது. சென்னையில் மட்டும் நாள்தோறும் 12ஆயிரம் முதல் 14ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 51 கோவிட் பாதுகாப்பு மையங்களில் 18ஆயிரத்து 614 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனை அல்லது கோவிட் பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்ல 289 வாகனங்கள் உள்ளன.

சென்னை மாநகர குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களிடையே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களோடு தொடர்பில் உள்ள தொற்றால் பாதிக்கப்படாதவர்களை தனிமைப்படுத்த ஏதுவாக 30அயிரம் நபர்கள் தங்கக்கூடிய வகையில் மையங்கள் அனைத்து வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளன. தொற்று உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றிற்கு 500 முதல் 550 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் வைரஸ் தொற்று அதிகம் கண்டறியப்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுவருகின்றன. இதுவரை 31 ஆயிரத்து 702 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 17 லட்சத்து 86ஆயிரத்து 970 நபர்கள் பயனடைந்துள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளை கைப்பேசியின் மூலமாக கண்காணிக்கும் திட்டம் மாநகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை சமூக களப்பணித் திட்டம் (Chennai Community Intervention Program) என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், கரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்டலத்திற்கு இரண்டு வாகனங்கள் வீதம், 15 மண்டலங்களுக்கு, மொத்தம் 30 சிறிய அதிநவீன எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (ஆக. 14) கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இவ்வாகனங்களில், கரோனா வைரஸ் தொற்று குறித்த முதலமைச்சரின் விழிப்புணர்வு உரை, சுகாதாரத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சியின் கரோனா விழிப்புணர்வு குறும்படங்கள் போன்றவை ஒளிபரப்பப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், கரோனா தொற்று பரிசோதனைகளை அதிகரிக்கவும், கரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி போன்றவை குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 12ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சியில் 10 லட்சம் இல்லங்களில் வழங்கவுள்ள 10 லட்சம் கரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 10 லட்சம் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பொழிகின்ற மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க பயன்படும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளின் அவசியம் குறித்த 10 லட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், ஆகியவற்றை வழங்கும் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


அதுமட்டுமின்றி பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய ஒரு லட்சம் நபர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் கைப்பேசி எண்கள் மூலமாக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 இடங்களில் உள்ள மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளுக்கு மாறும் வண்ண மின்விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக நேப்பியர் பாலம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மாறும் வண்ண விளக்குகளையும் தொடங்கி வைத்தார்.


மேலும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் (TUFIDCO) 2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால ஈவுத் தொகையான ஏழு கோடியே 44 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க...பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்; பராமரிப்பு இல்லாத அவலம்...!

ABOUT THE AUTHOR

...view details