தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2019, 10:07 AM IST

Updated : Sep 28, 2019, 12:04 PM IST

ETV Bharat / city

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மேலும் 3 பேர் கைது!

சென்னை: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றிருப்பதாக மேலும் மூன்று மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோரையும் சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

CBCID POLICE

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் வெங்கடேசன் மகன் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு படித்துவந்தார். உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரிக்கு அண்மையில் மின்னஞ்சலில் புகார் வந்ததையடுத்து, கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. இதில், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து உதித் சூர்யா தேர்ச்சி பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தமிழ்நாடு காவல் துறையின் சட்டம், ஒழுங்கு டிஜிபி ஜே.கே. திரிபாதி, இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை தேனி மாவட்ட காவல் துறையின் தனிப்படையினர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைமறைவாக இருந்த உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனை கைது செய்தனர்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னதாகவே பல மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து எம்பிபிஎஸ் படித்து வருவதும், இதற்காக சில தரகர்கள் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சிபிசிஐடி அலுவலர்கள் ஆள் மாறாட்டம் செய்த மாணவர்கள் குறித்தும் தரகர்கள் குறித்தும் விசாரணையை தொடங்கினர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மேலும் மூன்று பேர் கைது

அதனடிப்படையில், காஞ்சிபுரம் தனியார் கல்லூரியில் படித்துவரும் மாணவி அபிராமியின் தந்தை மாதவன், மாணவர் பிரவீனின் தந்தை சரவணன், ராகுலின் தந்தை டேவிஸ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டனர். மேலும், இவர்களிடம் நடத்தப்படவிருக்கும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் மாணவர்களை தேர்ச்சி பெறவைக்கும் கேரளாவைச் சேர்ந்த ஒரு தரகரிடமும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Last Updated : Sep 28, 2019, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details