திருநின்றவூர், லட்சுமிபுரம், 9வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மனைவி பத்மாவதி (65). இந்நிலையில், பத்மாவதி வீட்டிலிருந்து மாவு அரைக்க மில்லுக்கு சென்றார். இவர், அதே பகுதி, 4வது குறுக்கு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2பேர் அவரை வழிமறித்து உள்ளனர்.
பின்னர், அவர்களில் ஒருவன் இறங்கி வந்து பத்மாவதி கழுத்தில் கிடந்த 9 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து உள்ளார். இதனை அடுத்து, அவர் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து பொதுமக்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் தங்கச்சங்கிலியுடன் தயாராக இருந்த பைக்கில் ஏறி தப்பி தலைமறைவானார்.
இது குறித்து பத்மாவதி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதே போல் ஆவடி அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்து செல்லும் பதபதக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆவடி ஜே.பி. எஸ்டேட் பகுதியில் சாலையில் நடந்து சென்ற அப்பகுதியை சேர்ந்த பிரியா (35) என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 4 சவரன் தங்க சங்கிலியை பறித்தனர்.
அப்போது, பிரியா கூச்சலிட்டு சங்கிலியை விடாமல் பிடித்து கொண்டார். மேலும் அவர் கொள்ளையர்களை பிடிக்க போராடிய போது அவரை கீழே தள்ளிவிட்டு இருவரும் தப்பியோடினார். இவை அனைத்தும் அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சம்பவம் குறித்து ஆவடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் பட்டப்பகலில் பெண்ணிடம் 2 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். ஆவடி அருகே அடுத்தடுத்து மூன்று பெண்களிடம் நடத்திய செயின் பறிப்பு சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.