தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 13, 2020, 12:33 PM IST

ETV Bharat / city

விடைத்தாள் திருத்தும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் - ஆசிரியர்கள் கோரிக்கை!

சென்னை: விடைத்தாள் திருத்தும் மையங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என ஆசிரியர்கள் தேர்வுத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

valuation
valuation

இது தொடர்பாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் மனோகரன் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ” பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் அதனைத் தொடர்ந்து 11,12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்க இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இப்பணியை தொடங்கும் முன்பே அரசும், தேர்வுத்துறையும் சில சிறப்பு முன்னேற்பாடுகளை செய்துதர வேண்டும். அதன்படி,

  • விடைத்தாள் திருத்தும் மையங்களை தகுந்த இடைவெளியைப் பின்பற்றி அமைத்திடல் வேண்டும்.
  • தலைமைத் தேர்வர், மதிப்பெண் கூட்டுநர், உதவித் தேர்வர் என ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனி அறைகள் அமைத்திட வேண்டும்.
  • ஒவ்வொருவருக்கும் தனித்தனி இருக்கை வசதி ஏற்படுத்திட வேண்டும்.
  • கடந்த ஆண்டுகள் போல் இல்லாமல், தேர்வு மையங்களை விரிவுப்படுத்தி, தாலுகாவிற்கு ஒரு தேர்வு மையம் என அமைத்திடல் வேண்டும்.
  • ஆசிரியர்களின் இருப்பிடத்தைக் கணக்கில் எடுத்து அருகாமை மையத்தில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.
  • விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் வழக்கமான நேரமான காலை 8.30 என்பதை 9.30 என மாற்றி, மாலை 4 மணிக்கு கண்டிப்பாக முடித்து விட வேண்டும்.
  • விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வந்து செல்ல தேர்வுத்துறையே போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் விடைத்தாள் எண்ணிக்கையை கூட்டித் தரவோ, கூடுதல் விடைத்தாள் திருத்தும்படியோ நிர்பந்திக்கக் கூடாது.
  • ஆசிரியர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும்.
  • ஒவ்வொரு மையத்திலும் மருத்துவக்குழு அமைத்து நாள்தோறும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • பல ஆண்டுகளாக விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஊதியம் உயர்த்தப்படாததால், உழைப்பூதியம் உள்ளிட்ட அனைத்தையும் இரட்டிப்பாக்கித் தர வேண்டும்.

இது போன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்து தந்து, மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளை ஆசிரியர்கள் நிறைவேற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 12 மணி நேர வேலை... தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கோரும் சிறு, குறு நிறுவனங்கள்

ABOUT THE AUTHOR

...view details