சென்னை: ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான தேதியை முடிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
வார்டு மறுவரை உள்ளிட்ட காரணங்களுக்காக 2019ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஆகஸ்ட் 31ஆம் தேதி வாக்காளர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் ஏற்பாடு, தேதி உள்ளிட்டவை குறித்து முடிவுசெய்ய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்க, அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மாநிலத் தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி, தேர்தல் அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, தேமுதிக, தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, திருணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
முக்கியக் கோரிக்கைகள், முடிவுகள்
- காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை தேர்தல் நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த முடிவு
- கரோனா தொற்றுப் பரவலைக் கருத்திற்கொண்டு கூடுதல் வாக்குப்பதிவு மையங்களை அமைக்க வேண்டும்
- வாக்குப்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமரா, மூன்றடுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
- சுதந்திரமான ஜனநாயக முறையில் தேர்தல் நடத்திட அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதிமுகவின் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. 1996-2001, 2006-2011 காலங்களில் திமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது வரலாறு காணாத அளவுக்கு வன்முறை நடைபெற்றது. இந்த முறை சுதந்திரமான, நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
வாக்குப்பதிவு நேரம் எந்தச் சூழலிலும் காலை 7 மணி முதல் மாலை 6 வரை மணி என்ற அளவில்தான் இருக்க வேண்டும். காலை 7 முதல் மாலை 7 வரை என்று அளவில் இருக்கக் கூடாது என வலியுறுத்திஉள்ளோம். அனைத்துக் கட்சிகளும் இதனை ஏற்றுக்கொண்டு வலியுறுத்தியுள்ளது.
திமுக சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன்