சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மோடி அரசு மீண்டும், விவசாயிகளுக்கு எதிராகவும், நடுத்தர கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராகவும் சில திட்டங்களை கொண்டு வர உள்ளதாக குற்றம் சாட்டினார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது தவறு. மார்க்கெட்டில் இது என்ன விலை இருக்கின்றதோ அதைத் தான் கொடுக்க வேண்டும். பயிர்களுக்கு காப்பீடு வழங்கக்கூடாது என நிதி ஆயோக் உறுப்பினர் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இதுபோன்ற திட்டங்களால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை, நமக்கும் ஏற்படும்’ என்றும் எச்சரித்தார்.
மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான இந்த செயல்பாட்டை நாம் இப்பொழுதே எதிர்க்கவில்லை என்றால், நாடு மிகப்பெரிய மோசமான நிலைமையை சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், 'இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் ஆளுநரை எதிர்த்துப்பேசக்கூடாது. ஆளுநரை எதிர்த்துப்போராட்டம் நடத்தக்கூடாது என எந்தச் சட்டமும் இல்லை. கடவுள் மற்றும் மகாத்மா காந்தியையே நாம் விமர்சிக்கிற நிலையில் ஆளுநரை ஏன் விமர்சனம் செய்யக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது தமிழ்நாடு அரசு வழக்குப்பதிந்துள்ள நிலையில், முதலமைச்சர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. தமிழ்நாடு பாஜக தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ள இதுபோன்ற விஷயங்களில்’ சத்தமிடுவதாகவும் விமர்சித்தார்.