சென்னை: கடந்த 20ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளன. அவற்றில் சில படகுகள் 2018ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டவை என்பதால், அவை முற்றிலும் சேதம் அடைய வாய்ப்புள்ளது.
படகின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில், கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், தற்போது இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மீனவர்களால் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை.