தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை செய்யக்கோரி மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் - மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

CM
CM

By

Published : Jul 25, 2022, 9:58 PM IST

சென்னை: கடந்த 20ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளன. அவற்றில் சில படகுகள் 2018ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டவை என்பதால், அவை முற்றிலும் சேதம் அடைய வாய்ப்புள்ளது.

படகின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில், கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், தற்போது இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மீனவர்களால் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை.

அதனால், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உயர்மட்ட அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, படகின் உரிமையாளர்கள், இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை தாயகம் அழைத்து வர உதவியதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஸ்டாலின் இக்கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சென்னைக்கு அருகே புதிய ஏர்போர்ட் - டெல்லியில் நாளை முக்கிய ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details