தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வன்னியர்களுக்கான 10.5% உள்‌ இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை - அரசியல் கட்சியினரின் கருத்துகள் என்ன? - சென்னை செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்‌ இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் காணலாம்.

உச்ச நீதிமன்றம் தடை
உச்ச நீதிமன்றம் தடை

By

Published : Mar 31, 2022, 5:19 PM IST

சென்னை:வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்‌ இடஒதுக்கீடு வழங்கி, கடந்த அதிமுக ஆட்சியில்‌ சட்டம்‌ இயற்றப்பட்டு, திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றபின், அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதற்கிடையே வழங்கப்பட்ட உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனால், வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செல்லுபடி ஆவதுடன் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையும் ரத்தாகிறது. இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள் குறித்துப் பார்க்கலாம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 % உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள காரணங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்து இருப்பது மனநிறைவளிக்கிறது. இட ஒதுக்கீடு விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்"என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

அதிமுக செய்தித்தொடர்பாளர் சிவசங்கரி: "கடந்த அதிமுக அரசில்தான் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டிற்கான சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் திமுக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டது. எனினும் நீதிமன்றங்கள் இதற்குத் தடை விதித்துள்ளன. தொடர்ந்து அதிமுக சட்ட ரீதியாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராடும்'' என அதிமுக செய்தித்தொடர்பாளர் சிவசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன்:"இது ஒரு சட்டப்பிரச்னை. இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஏற்கெனவே இந்த மாதிரியான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 69 விழுக்காடு கல்விக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் ஒதுக்கப்படுகிறது. எனவே, இதனைத் தமிழ்நாடு அரசு தான் உச்ச நீதிமன்றத்தை அணுகி சட்ட ரீதியாக தீர்வுகாண வேண்டும்" என தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கூறியுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சே. கருணாஸ்: "கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அவசர அவசரமாக வன்னியர் சமூகத்துக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்டது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை எதிர்த்து முக்குலத்தோர் புலிப்படையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். எனவே, இத்தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்" என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சொல்லியிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ்: "கடந்த அதிமுக அரசு பாமகவுடன் கடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் கூட்டணி வைத்து வாக்கு அறுவடை செய்வதற்காக இறுதிகட்டத்தில் கொண்டு வந்ததுதான் வன்னியர்களுக்கான 10.5 உள்ஒதுக்கீடு மசோதா. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அப்போதே சொன்னார். இது நீதிமன்றத்தில் எடுபடாது என்று. அது இன்றைக்கு நடந்திருக்கிறது. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல் இப்படி செய்வது ஆளும் அரசுகளின் அறியாமை என்றே சொல்லலாம்"என மநீம செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ் விமர்சித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்விற்கு குறுகிய காலம் இருப்பதால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details