சென்னைஎழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறைக்கு, 'குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழா' நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத்தலைவரின் கொடி வழங்குதல் விழாவில் பங்கேற்று, கொடியினை துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு காவல் துறை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. குடியரசுத்தலைவரினுடைய வண்ணக்கொடி என்ற மிக மிக உயர்ந்த அங்கீகாரத்தை நம்முடைய தமிழ்நாடு காவல் துறை பெறுகிறது. அதனை வழங்குவதற்கு துணை குடியரசு தலைவர் வருகை தந்துள்ளார். இச்சிறப்பினை வழங்குவதற்காக வருகை தந்துள்ள துணை குடியரசுத்தலைவருக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடி:இது இரட்டை மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்குகிறது. தமிழ்நாடு காவல் துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே கிடைத்திருக்கக்கூடிய வரலாற்றுமிகு பெருமை இது. தனிப்பட்ட ஒரு காவலருக்குக் கிடைத்த பெருமை அல்ல இது, ஒட்டுமொத்தமாக அனைத்துக் காவலர்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பெருமை ஆகும்.

இரவு பகல் பாராது, வெயில் மழை பாராது, ஏன், தன் உயிரைப்பற்றிக்கூட கவலைப்படாமல் ஆற்றிய உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. தமிழ்நாடு காவல்துறையானது தனக்குத்தானே சல்யூட் அடித்துக்கொள்ள வேண்டிய பெருமை இது.
பழம்பெரும் நகரமான இந்த சென்னை மாநகரத்தில் 1856ஆம் ஆண்டு அன்றைய மதராஸ் மாநகரில்தான் முதன்முதலில் காவல் துறை வரலாறு தொடங்கியது. 1859ஆம் ஆண்டு மதராஸ் மாகாண காவல் துறைச்சட்டம் இயற்றப்பட்டது. எனவே, நமது காவல் துறை என்பது இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு முன்மாதிரியான காவல் துறை, பொது அமைதியைக் காப்பது, குற்றங்களில் இருந்து மக்களைக் காப்பது, சட்டங்களைக் காப்பது, பொது மக்களைக் காப்பது, ஒட்டுமொத்தமாகச் சொன்னால் மக்களைக் காப்பது, இதுதான் உங்களது முழு முதல் பணி ஆகும்.
பெண்கள் காவல்துறைப் பணியில் முன்னோடி: இன்று காவல்துறையில் 1 டி.ஜி.பி, 2 ஏ.டி.ஜி.பி, 14 ஐ.ஜி முதலிய பெண் காவல் உயர் அலுவலர்களும், 20,000 பெண் காவலர்களும் களப்பணியாற்றி வருகிறார்கள். பெண்களுக்குக் காவல்துறையில் அதிகாரம் அளித்ததில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு.
கைரேகைப் பிரிவு, மோப்ப நாய் பிரிவு, புகைப்படப் பிரிவு, கணினித் தொழில்நுட்பப்பிரிவு, கடலோரப் பாதுகாப்புப் பிரிவு, மகளிர் கமாண்டோ பிரிவு எனப்பல்வேறு பிரிவுகள், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக மட்டுமல்ல, முன்னணியிலும் நமது தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது.
அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கடந்த 30 ஆண்டுகளாகச் சிறப்பாக செயல்பட்டு, பல பதக்கங்களை வென்று வருவதை நினைக்கும்போது ஒவ்வொரு தமிழ்நாட்டவரும் பெருமை கொள்ளக்கூடிய அளவில் அமைந்திருக்கிறது. கடந்த ஓராண்டு காலமாக காவல் துறையின் செயல்பாடு முன்பைவிட மிக அதிகளவில் பாராட்டும்படியாக உள்ளது.