சென்னை: பெத்தேல்நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் அண்ணாதுரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், “ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வீடில்லா ஏழை மக்கள் வீடுகளை கட்டி வசிக்கின்றனர். அங்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழ்நாடு அரசு செய்து தந்துள்ளது.
அதேபோல் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் உள்ளிட்ட வரிகளை மக்கள் செலுத்திவருகின்றனர். மேலும் ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளது, அரசு உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
வீடுகளுக்கு பட்டா கோரி அரசுக்கு விண்ணப்பித்த நிலையில், 15 ஆண்டு கால போராட்டங்களுக்குப் பின், அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தது. மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக வகைமாற்றம் செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவும் பிறப்பித்ததாகக் கூறினார். அதன்பின் பல்வேறு காரணங்களால் பட்டா வழங்கப்படவில்லை.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவிடப்பட்டதால், மக்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. எந்த நேரத்திலும் வீடுகள் இடிக்கப்படலாம் என்பதால், தங்களை வெளியேற்றத் தடைவிதிக்க வேண்டும். அரசின் மக்கள் நலத் திட்டப்படி பட்டா வழங்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.