சென்னை:சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், தமிழ் மாநில காங்கிரஸின் பொதுச் செயலாளர் திருவொற்றியூர் சுகுமாரன் அவரது 300 ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். அவர்களை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ் அழகிரி, 'தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக விச்சு லெனின் பிரசாத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூரில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் உறுதிமொழி ஏற்கிறார்கள்.
பாஜக பரிந்துரை
காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது உண்மை. ஆனால், அது ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோதோ இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதோ ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோதோ அல்ல. வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, பாஜக வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது தான் காஷ்மீரிலிருந்து பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஜக்மோகன் சிங் பாஜக பரிந்துரையின் பேரில், காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் இருந்த போதுதான் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டனர். இப்படியிருக்கும் போது, காங்கிரஸ் பண்டிட்களை வெளியேற்றியது என்று எப்படிக் கூற முடியும். இவர்கள் வரலாற்றைத் திரித்து எழுதப் பார்க்கின்றனர்.
காஷ்மீர் விவகாரம்
ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்ட்கள் வரலாற்றைத் திருத்தி எழுத நினைத்தது போல், மோடி வரலாற்றைத் திரித்து எழுத முயற்சிக்கின்றார். வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியா; ஆனால், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம், அதைக் குலைப்பதாக உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குக் கூட்டுத் தலைமை தேவையில்லை; ராகுல் காந்தி போன்ற இளம் தலைவர்கள் தான் தேவை. 7 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லை என்றால், காங்கிரஸ் அழிந்துவிடுமா? மேலும், கூட்டுத் தலைமையை தாங்கள் ஏற்கவில்லை. அப்படி சொல்பவர்கள் காங்கிரஸுக்கு விரோதமானவர்கள்.