சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் 'பிளாஸ்டிக்' எனப்படும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் நெகிழிப் பயன்பாடு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
அதனடிப்படையில், 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' என்ற தலைப்பில் 10 லட்சம் பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்ற கின்னஸ் சாதனை முயற்சியை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மைதானங்களில் ஒன்று சேர்ந்து 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' என்ற தலைப்பில் நெகிழி எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.