சென்னை:வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது லட்சிய திமுக கட்சி யாரையும் ஆதரிக்கவில்லை என நடிகரும், அக்கட்சியின் தலைவருமான டி. ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடைபெறவிருக்கும் 2021ஆம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன் ஓபிஎஸ் என்னை அழைத்தார். நீண்ட நாள் நண்பரான அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாமலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லாமலும் அதிமுக - திமுக சந்திக்கின்ற முதல் தேர்தல் களம்.
இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பலம். இதைத்தவிர கூட்டணியென்று சேர்த்திருக்கிறார்கள் பக்க பலம். அதைத் தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பல பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக்கொள்ளப்போகிறது பலப்பரிட்சை. இதில் நான் போய் என்ன செய்ய போகிறேன் புது சிகிச்சை.
ஒருவருடைய வாக்கு வன்மை, அவர் வார்த்தையில் இருக்கும் தன்மை, அதில் வெளிபடும் உண்மை, அதற்கு ஒரு சக்தி இருக்கிறது என்று சில முன்னாள் முதலமைச்சர்கள் நம்பினார்கள். அதனடிப்படையில் தேர்தல் பரப்புரைக்கு அழைத்தார்கள். அது ஒரு காலம்.