தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 10, 2021, 3:55 PM IST

ETV Bharat / city

'ஹெலிகாப்டர் விபத்து; தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை'

குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்தான தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு காவல் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து
ஹெலிகாப்டர் விபத்து

சென்னை:கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 ராணுவ உயர் அலுவலர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

உலகையே உலுக்கிய இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக ஹெலிகாப்டர் விபத்து குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய, அவதூறான, உண்மைக்குப் புறம்பான கருத்துகள் பலரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாகக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று விபத்திற்கான உண்மையான காரணம் அறியும்வரை உயிரிழந்த வீரர்களின் மரியாதை கருதி தேவையற்ற வதந்திகள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் விமானப்படை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு காவல் துறை எச்சரித்துள்ளது.

மேலும் தொடர்ந்து அவதூறு பரப்புவோர் குறித்த தகவல்களை சைபர் கிரைம் காவல் துறையினர் கண்காணித்துவருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: வீடியோ எடுத்தவர்களின் பரபரப்பு பேட்டி

ABOUT THE AUTHOR

...view details