சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக, திமுக, தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனி அணிகளாக களம் காணுகின்றனர். இந்த அணிகள் களத்தில் என்ன மாதிரியான பலத்துடன் களமிறங்குகின்றன, என்ன திட்டம் வைத்திருக்கின்றன என்பவனவற்றை இதில் காணலாம்.
அதிமுக தலைமையிலான கூட்டணி:
ஆளும் கட்சியான அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் தேர்தல் களத்தில் நிற்கிறது. முதலில் பின்தங்கி இருந்த அதிமுக, தற்போது களத்தில் திமுகவிற்கு இணையாக வெற்றி பெறும் பலத்துடன் முன்னேறி உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாகவே பல்வேறு கவர்ச்சிகரத் திட்டங்களை அதிமுக அரசு அறிவித்திருந்தது.
இறுதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் பல்வேறு விதமான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அறிவிப்பு என்பது தேர்தலில் பெரும்விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கிராமப்புற விவசாயிகளின் வாக்குகளைப் பெறும் வகையில், பல்வேறு விதமான கவர்ச்சிகரத் தள்ளுபடி அறிவிப்புகளையும் அதிமுக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1500 வழங்குவது, இலவச சலவை இயந்திரம், ஆண்டிற்கு 6 எரிவாயு சிலிண்டர் இலவசம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி, பெண்களுக்கு பேருந்துக் கட்டணத்தில் சலுகை போன்ற அறிவிப்புகள் பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.
மேலும், பிப்ரவரி 13ஆம் தேதி விவசாயிகளைக் கவரும் வகையில் ரூ.12,110 கோடி மதிப்புள்ள பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை பழனிசாமி வெளியிட்டார். இதனால் பதினாறு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ஆறு சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். காவிரி பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
பொதுவாக அதிமுக அரசு எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கிராமப்புறப் பகுதி வாக்காளர்களையும், பெண் வாக்காளர்களையும் கவரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வந்திருக்கிறது என்பது தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் என்பதை மறுப்பதற்கில்லை.
மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து அறிவிப்புடன், கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜிபி டேட்டா இலவசம் ஆகியவையும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஈபிஎஸ், அதிமுக ஆட்சியில் 13 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 400 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
பொதுவாக ஆளும்கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடும்போது பொதுமக்களுக்குப் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவும்.பல்வேறு விதமான தள்ளுபடி அறிவிப்புகள், இலவசத் திட்டங்கள் வெளியிடுவது என்பது வழக்கம். இதுபோன்ற அறிவிப்புகள் மூலம் அரசுக்கு எதிரான மனநிலையினை மாற்றுவதற்கான தொடர் முயற்சியினை அதிமுக அரசு எடுத்துள்ளதாகவும், முத்தாய்ப்பாக வன்னியர் வாக்கு வங்கியை குறிவைத்து கடைசி நேரத்தில் சட்ட மசோதாவினை பேரவையில் தாக்கல் செய்து ஆளுநர் ஒப்புதலைப் பெற்றது.
குறிப்பாக திமுக குடும்பக்கட்சி என்றும், வாரிசு அரசியலை மையப்படுத்தி தொடர் பரப்புரையை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.