சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களுக்கு ஆளுநர் மாளிகை அனுமதி அளிக்காமல் உள்ள நிலையில், பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாக்களில் முக்கியமானதான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அவர் அனுப்பாமல் உள்ளார்.
இதனால் ஆளுநர் மாளிகை தமிழ் புத்தாண்டு தினத்தில் முதன் முதலாக அளித்த தேநீர் விருந்தைக்கூட அரசு புறக்கணித்தது. திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் மீது கடுமையான அதிருப்தியை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் தன்னிச்சையாக கூட்டி நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக்கல்விக் கொள்கையை நிறைவேற்றவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி 2021 செப்டம்பர் 18ஆம் தேதி பதவியேற்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்வதாக தொடர்ந்து தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு ரத்து உள்பட 8 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சிக்கும் அளவிற்குத் தள்ளியது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை தந்தது. அதனை நிறைவேற்றவும், நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது பற்றி ஆராய நீதிபதி ராஜன் குழுவையும் நியமித்தது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமியற்றி 2021 செப்டம்பர் மாதம் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால்,அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டார். 142 நாள்களுக்குப் பிறகு மசோதாவில் ஆட்சேபங்கள் இருப்பதாக தமிழ்நாடு சட்டப் பேரவைத்தலைவருக்கு திருப்பி அனுப்பினார்.
இதனால், தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு அமர்வில் நீட் விலக்கு கோரும் மசோதா மீண்டும் விவாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. சட்டப்பேரவையில் 2ஆவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆளுநரை சந்தித்து வலியுறுத்திப் பேசினார். ஆனாலும், அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பாமல் காலதாமதம் செய்து வருகிறார். தமிழ்நாடு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தி தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்தது.