சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில்(ஐஐடி) ஆட்டோமொபைல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ரூ. 66 கோடி செலவில் நவீன இயந்திரங்கள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கார்கள், இருசக்கர வாகனங்கள், விமானம், ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் வகையில் நாட்டில் முதல்முறையாக ஆராய்ச்சியுடன் கூடிய தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன இயந்திரம் தயாரிக்கும் ஆய்வுமையம் சென்னையில் தொடக்கம்!
சென்னை: இந்திய தொழில்நுட்ப கழகம்(ஐஐடியில்) ஆட்டோமொபைல் துறையில் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பதற்கான ஆய்வு மையத்தை, தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறையின் செயலாளர் ஷியாக் தொடக்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை செயலாளர் சியாக் பேசுகையில், இந்த ஆய்வுக் கூடம் மூலம் வெளிநாடுகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள் இறக்குமதி செய்வதற்கான தேவையும், செலவினங்கள் குறையும் என்றார்.
தொடர்ந்து ஐஐடியின் முதல்வர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசுகையில், ஐஐடி ஏற்கனவே தானியங்கி உதிரிபாகங்களை தயாரிக்க ஏராளமான தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள், ராணுவ தளவாடங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் வகையில் இந்த ஆராய்ச்சிக்கூடம் இயந்திரங்கள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார்.