கறுப்பு காந்தி என போற்றப்படும் கர்மவீரர் காமராஜரையும் அக்டோபர் 2ஆம் தேதியையும் பிரிக்க முடியாது.
அது குறித்து பார்ப்போம்.
காந்திய கொள்கை
காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 16 வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் காமராஜர். அக்கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டு 1921ஆம் ஆண்டு மதுரையில் காந்தியை நேரில் சந்தித்தார். தேசத் தந்தையை சந்தித்த மகிழ்ச்சி மனதை பரவசப்படுத்தியது. அதேவேகத்தில், தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் காங்கிரஸ் கட்சியை கொண்டுசென்றார் காமராஜர்.
3 முறை முதலமைச்சர்
காமராஜர் தனது 34ஆவது வயதில் 1937ஆம் ஆண்டு சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினராக முதன் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அவர் பார்க்காத சிறைகளே இல்லை என்றே சொல்லலாம். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையிலேயே வாழ்க்கையை கழித்தார்.
1954ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற காமராஜர் பின்னர் 1957, 1962ஆம் ஆண்டுகள் நடைபெற்ற தேர்தல்களிலும் தொடர் வெற்றிபெற்று மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக நீடித்தார்.
கல்விக்கண் திறந்த படிக்காத மேதை!
தனது ஆட்சிக் காலத்தில் ஏராளமான பள்ளிகளைத் திறந்ததோடு பள்ளி பணி நாள்களை 180 லிருந்து 200 ஆக அதிகரித்தார் காமராஜர். நாடு போற்றும் மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகம் செய்து ஏழைகளின் நெஞ்சில் குடிபுகுந்தார்.
அவரது தீவிரமான முயற்சியால் ஏழு விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் 37 விழுக்காடாக அதிகரித்தது. அதனால்தான் 'கல்விக்கண் திறந்த காமராஜர்' என மக்கள் போற்றுகின்றனர்.
நீர்வளம் காக்க அணைகள் கட்டி சாதனை
பவானி, வைகை, மணிமுத்தாறு, சாத்தனூர், கிருஷ்ணகிரி போன்ற முக்கிய அணைகள் எல்லாம் அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவைதான்.