சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி , பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில், 359 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். இந்தப்பட்டமளிப்பு விழாவில் 19,363 பேருக்கு பதக்கம், பட்டம், சான்றுகள் வழங்கப்பட்டன. பட்டங்களை வழங்கியப் பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,
’பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மாநிலம் முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்தி, சிறப்பான பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் இருக்கை, தந்தை பெரியார் இருக்கை, அண்ணா இருக்கை என்று சிறந்த முயற்சிகளை திறந்தநிலை பல்கலைக்கழகம் எடுத்துள்ளதற்குப் பாராட்டுகிறேன். தினமும் பல மாற்றங்கள் நிகழும் உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும், பல புதிய பரிணாமங்களில் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்ததற்கு சென்னை ஐ.ஐ.டி.,க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி., பிற பல்கலைக்கழகங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. ஐ.ஐ.டி., போன்ற தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் போது, அந்த பல்கலைக்கழகங்களும் வளர்ச்சியடையும்.
தமிழ்நாடு பல ஆண்டுகளாக பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திவருகிறது. இப்போது மாற்றம் என்ற காளையை நாம் அடக்கி, கையாள வேண்டும். அண்டைநாடான சீனா மற்றும் பல சிறிய நாடுகளும் முன்னேறியுள்ளன. மாற்றங்களைப் புகுத்தி, சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாமும் வளர்ச்சியை நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறோம்.