தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசியக்கல்விக்கொள்கையைப் படிக்காமலேயே சிலர் எதிர்க்கின்றனர் - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு! - Governor RN Ravi

தேசிய கல்விக் கொள்கையைப் படிக்காமலேயே சிலர் எதிர்த்து வருவதாகவும், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கையை படிக்காமலே  சிலர் எதிர்த்து வருகின்றனர் ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு
தேசியக் கல்விக் கொள்கையை படிக்காமலே சிலர் எதிர்த்து வருகின்றனர் ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு

By

Published : May 30, 2022, 4:11 PM IST

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி , பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில், 359 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். இந்தப்பட்டமளிப்பு விழாவில் 19,363 பேருக்கு பதக்கம், பட்டம், சான்றுகள் வழங்கப்பட்டன. பட்டங்களை வழங்கியப் பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,

’பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மாநிலம் முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்தி, சிறப்பான பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் இருக்கை, தந்தை பெரியார் இருக்கை, அண்ணா இருக்கை என்று சிறந்த முயற்சிகளை திறந்தநிலை பல்கலைக்கழகம் எடுத்துள்ளதற்குப் பாராட்டுகிறேன். தினமும் பல மாற்றங்கள் நிகழும் உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும், பல புதிய பரிணாமங்களில் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்ததற்கு சென்னை ஐ.ஐ.டி.,க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி., பிற பல்கலைக்கழகங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. ஐ.ஐ.டி., போன்ற தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் போது, அந்த பல்கலைக்கழகங்களும் வளர்ச்சியடையும்.

தமிழ்நாடு பல ஆண்டுகளாக பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திவருகிறது. இப்போது மாற்றம் என்ற காளையை நாம் அடக்கி, கையாள வேண்டும். அண்டைநாடான சீனா மற்றும் பல சிறிய நாடுகளும் முன்னேறியுள்ளன. மாற்றங்களைப் புகுத்தி, சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாமும் வளர்ச்சியை நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

பெண்கல்வியே நாட்டின் சொத்து:இந்தியாவின் கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் 70 விழுக்காடு அளவுக்கு பெண்களே உயர் கல்வி படிப்பவர்களாக இருக்கின்றனர். பெண்கள் அதிகளவில் உயர்கல்வி பயில, சமுதாய முன்னெடுப்புகள், மாற்றங்களே காரணம். பெண்கல்வியே நாட்டின் சொத்து. அவர்களே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுச் செல்கின்றனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுத்தரச் சொல்லும் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை முதலில் படிக்க வேண்டும். அதை முழுவதும் படிக்காமலும், புரிந்துகொள்ளாமலும் சிலர் எதிர்த்து வருகின்றனர்.

தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும்: கல்வியை வேறுவடிவில் அணுகத் தயாராக வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும். பல மாநிலங்கள், மொழிகள், கலாசாரங்கள் என்று இருப்பதே இந்தியா. பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவில் அனைவருக்கும் இயற்கையான சத்தான உணவுகள், சுகாதாரம், தரமான கல்வி, தடையில்லா மின்சாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பிரச்னைகளை அணுகும் முறை மாறுபட்டுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையை படிக்காமலேயே சிலர் எதிர்த்து வருகின்றனர் ஆளுநர் - ஆர்என் ரவி பேச்சு

வன்முறை எதற்கும் தீர்வாகாது. வன்முறையை முடிவுக்குக்கொண்டுவர வேண்டும். விவாதமே தீர்வு ; வன்முறையல்ல, இந்தியா நம்பிக்கையுடன் முன்னேறிச்செல்கிறது. படித்து முடிக்கும் அனைவருக்கும் அரசால் வேலை தர முடியாது என்பதால் இளைஞர்கள் தொழில்முனைவோராக முயற்சிக்க வேண்டும். வேலை தருவோராக வர வேண்டும். வேலை தேடுவோராக வரக்கூடாது. மத்திய அரசின் நிதி ஆயோக் இணையதளத்தில் அதற்கான தகவல் அனைத்தும் கிடைக்கின்றன’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பத்திரிகையாளர்களுக்குப் பணம் வழங்கிய விவகாரம்: பாரதியார் பல்கலைக்கழக பிஆர்ஓ பதவி பறிப்பு!

ABOUT THE AUTHOR

...view details