சமீப காலமாக சமூக வலைதளப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதில் தொடங்கி, இறுதிச் சடங்குகளை நேரலையாகக் காண்பிப்பது வரை சமூக வலைதளப் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
மேலும் அறியப்படாத குற்றங்களை வெளிக்கொண்டு வரவும், குற்றங்கள் நடப்பின் அதை நொடிப்பொழுதில் நாடு முழுவதும் கொண்டுசெல்லவும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்திவருகின்றனர். குறிப்பிட்ட சாதி, மதம், பெண்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களைக் கையாண்டு கருத்தினைப் பரப்பிவருகின்றனர்.
இது போன்ற கருத்துகள், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அமைவதால் தமிழ்நாடு காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சமூக வலைதளங்கள் மூலமாக அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக 75 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் எல்லை மீறிய அளவில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்ட 16 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர்களின் சமூக வலைதளப் பக்கங்களிலிருந்த காணொலிப் பதிவுகள் அழிக்கப்பட்டு முடக்கியிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.