தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப. வீரபாண்டியன் நியமனம்! - கோ கருணாநிதி

சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப. வீரபாண்டியனும், உறுப்பினர்களாக முனைவர் கி. தனவேல், பேராசிரியர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், பேராசிரியர் ஆர். இராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோரை நியமித்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Social Justice Monitoring Committee, tamil nadu government, சமூக நீதிக் கண்காணிப்புக் குழு, சுப வீரபாண்டியன், கி தனவேல், சுவாமிநாதன் தேவதாஸ், மனுஷ்யபுத்திரன், ஏ ஜெய்சன், ஆர் இராஜேந்திரன், கோ கருணாநிதி, ஸ்டாலின்
சமூக நீதிக் கண்காணிப்புக் குழு

By

Published : Oct 23, 2021, 2:07 PM IST

சென்னை: சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், "சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் "சமூகநீதிக் கண்காணிப்புக் குழு" அமைக்கப்படும் எனவும், இக்கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் செயல்படுத்தும் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் எனவும், இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் எனவும் சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள்.

அந்த வகையில் சமூக நீதி, பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், பணிகளை மேற்கொள்வதோடு, சரியாக அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, கீழ்க்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினை’ அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  1. பேராசிரியர் சுப. வீரபாண்டியன் - தலைவர்
  2. முனைவர் கி. தனவேல் (ஐஏஎஸ்., ஓய்வு) - உறுப்பினர்
  3. பேராசிரியர் சுவாமிநாதன் தேவதாஸ் - உறுப்பினர்
  4. கவிஞர் மனுஷ்யபுத்திரன் - உறுப்பினர்
  5. ஏ.ஜெய்சன் - உறுப்பினர்
  6. பேராசிரியர் ஆர். இராஜேந்திரன் - உறுப்பினர்
  7. கோ. கருணாநிதி - உறுப்பினர்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சமூகநீதி கண்காணிப்புக் குழுவானது, சமூகநீதி அளவுகோல் முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, அவை முழுமையாக பின்பற்றப்படாவிட்டால் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அரசுக்கு அவ்வப்போது தமது பரிந்துரைகளை வழங்கும்.

இக்குழுவில் சமூகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் (உறுப்பினர்-செயலராக) அங்கம் வகிப்பார்.

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்கள்

  • சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுப. வீரபாண்டியன்., சிறுவயது தொடங்கி, சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழ்நாடு முழுவதும் பரப்பி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமூகநலன் குறித்து, பேசியும் எழுதியும் வருபவர்.
  • முனைவர் கி.தனவேல்., ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். ஒன்றிய அரசிலும், மாநில அரசிலும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.
  • பேராசிரியர் சுவாமிநாதன் தேவதாஸ்., கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்த நீண்ட அனுபவம் பெற்றவர்; மேலும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இணைத் துணைவேந்தராகப் பணிபுரிந்தவர்.
  • கவிஞர் மனுஷ்ய புத்திரன்., வரலாறு மற்றும் ஊடகத்துறையில் இரண்டு முதுகலை பட்டங்கள் பெற்றவர். இந்தியாவின் உயரிய தேசிய விருதுகளில் ஒன்றான சன்ஸ்கிருதி சம்மான் விருதினைப் பெற்றவர். இந்தியா டுடே இவரை தமிழ்நாட்டின் செல்வாக்குமிக்க 10 மனிதர்களில் ஒருவராக இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக தேர்ந்தெடுத்ததும் ஆனந்தவிகடன் தமிழகத்தின் டாப் டென் மனிதர்களில் ஒருவராக தேர்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
  • ஜெய்சன்., ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் நீண்ட அனுபவம் கொண்டவர்.
  • பேராசிரியர் ஆர். இராஜேந்திரன்., கடந்த 36 ஆண்டுகளாகக் கல்விப் பணியாற்றியவர். பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
  • கோ. கருணாநிதி., அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று, சமூகநீதியை பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று அறிமுகம் செய்தவர்.

ABOUT THE AUTHOR

...view details