தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தடகள வீராங்கனையிடம் பாலினம் தொடர்பாக சர்ச்சையான கேள்வி எழுப்பிய உதவி ஆணையர் - சாந்தி சவுந்தரராஜன் தடகள வீராங்கனை

சகப் பயிற்சியாளர் தன்னை சாதிய ரீதியாகவும், பாலின ரீதியாகவும் இழிவாகப் பேசி தொந்தரவு செய்வதாக தடகள வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் அளித்த புகாரில், அவரிடம் காவல் உதவி ஆணையர் பாலினம் தொடர்பாக கேள்வி எழுப்பியது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

shanthi soundarrajan case history
சாந்தி சவுந்தரராஜன்

By

Published : Feb 28, 2022, 12:03 PM IST

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன், பன்னாட்டு அளவில் 11 பதக்கங்களையும், தேசிய அளவில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்றவர். 2006ஆம் ஆண்டில் தோகாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர். பாலின பிரச்சினை காரணமாக சாந்திக்கு அளிக்கப்பட்ட வெள்ளிப்பதக்கம் திரும்பப் பெறப்பட்டு சர்ச்சைக்குள்ளானது.

அதன்பின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், 2018ஆம் ஆண்டு தன்னுடன் பணிபுரியும் பயிற்சியாளர் ராஜன் ஆப்ரஹாம் சாதி ரீதியாகவும், பாலின அடையாளம் குறித்தும் இழிவாகப் பேசிவருவதாகத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் புகார் கொடுத்தார்.

வழக்குப் பதிவு

இந்தப் புகார் சென்னை காவல் துறையிலும் அளிக்கப்பட்டது. மேலும், தேசிய பழங்குடியினர் ஆணையத்திடம் புகார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் வேப்பேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பட்டியலின மக்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணையில், சாந்தி சவுந்தரராஜன் அளித்த புகாரில், பட்டியலின மக்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட்டபோது, முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்துள்ளதாகவும், பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொண்டபோது முகாந்திரம் இருப்பதாகவும் காவல் துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, தேசிய பழங்குடியினர் ஆணையத்தில் வருகிற மார்ச் மாதம் வர இருக்கிறது அதன் காரணத்தினால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக உத்தரவுப்படி, புதிதாகப் பதவியேற்ற வேப்பேரி உதவி ஆணையர், தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜனுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தியுள்ளார்.

சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி

அப்போது நடந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது சாந்தி சவுந்தரராஜன் பாலினம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்குப் பதில் தர முடியாது என எழுத்துப்பூர்வமாக சாந்தி சவுந்தரராஜன் எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்த விசாரணை சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்திற்கு முந்தைய சமூக நலத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய மாற்றுப் பாலின ஆணையத்தின் தென்மண்டலப் பிரதிநிதி கோபி சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறைத் தரப்பில் கேட்கும்போது, புகாரின் அடிப்படையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், விசாரணை தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்குச் சட்ட ரீதியான ஆலோசனை நடத்த அனுப்பப்பட இருப்பதாகவும் காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வருகிற மார்ச் மாதம் தேசிய பழங்குடி ஆணையத்தில் நடைபெறும் விசாரணையில் அறிக்கைத் தாக்கல்செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:உக்ரைன் ✈ இந்தியா: புறப்பட்ட 5ஆவது விமானம்!

ABOUT THE AUTHOR

...view details