தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 10, 2020, 6:28 PM IST

ETV Bharat / city

நெய்வேலி செல்வமுருகன் மரண வழக்கு - அரசு பதிலளிக்க ஆணை!

சென்னை: நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணம் தொடர்பாக காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதியக் கோரிய வழக்கில் தமிழக அரசும் சிபிசிஐடியும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

case
case

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன், திருட்டு வழக்கில் நெய்வேலி காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லபட்டு, பின்னர் கைதாகி விருதாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் செல்வமுருகன் இறந்து விட்டதாக அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நெய்வேலி காவல்துறையினர் அடித்து சித்ரவதை செய்து தனது கணவரை கொன்று விட்டதாகவும், எனவே நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி செல்வமுருகனின் மனைவி பிரேமா நவம்பர் 5 ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளார்.

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம், நெய்வேலி டி.எஸ்.பி. அலுவலக குற்றப்பிரிவில் உள்ள சுதாகர், அறிவழகன் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக் கோரும் புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் பிரேமா மனு தாக்கல் செய்துள்ளார். செல்வமுருகன் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்களை கொண்டு மறு உடற்கூராய்வு செய்யவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பிரேமா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செல்வமுருகன் மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்றும், காவல்துறையினர் மீது வழக்கு பதிந்து மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் வாதிட்டார்.

தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், தேசிய மனித உரிமை ஆணைய வழிகாட்டுதலின்படி மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றதாகவும் கூறினார். மேலும், அதனை முழுவதும் வீடியோ பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த மரணம் காவலில் இருக்கும்போது நடைபெறவில்லை என்றும், இதில் அரசியல் நோக்கத்திற்காக கட்டுக்கதைகள் புனையப்படுவதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

இதனையடுத்து இந்த வழக்கில் சிபிசிஐடி-யை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதியக் கோரும் பிரேமாவின் மனு குறித்து தமிழக அரசும், சிபிசிஐடி-யும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: கை கழுவ பாடம் எடுத்த குஷ்பு

ABOUT THE AUTHOR

...view details