இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நடைமுறையிலிருக்கும் தற்காலச்சூழலில், அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்க அனுமதியளித்திருப்பதும், அதன் விளைவாகத் தொழிலாளர்கள் அதிகப்படியாக தொற்றுக்கு ஆளாவதும் அதிர்ச்சியளிக்கிறது.
வணிகமும், லாபமும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட தொழிற்சாலைகளின் தன்னல முடிவுக்கு ஒத்திசைந்து, அவைகள் இயங்க அரசு அனுமதித்திருப்பது உழைக்கும் தொழிலாளர்களின் உயிருக்கு உலைவைக்கும் கொடுஞ்செயலாகும்.
வேண்டாம் கண்துடைப்பு
கரோனா பரவலும், பாதுகாப்பின்மையும் இருப்பதாகத் தொழிலாளர்கள் போராடியதையடுத்து கண்துடைப்பிற்காக ஒருவாரம் மூடப்பட்டிருந்த ஹுண்டாய், ரெனால்ட் நிசான் போன்ற தொழிற்சாலைகள், கரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகிய தங்களது தொழிலாளர்களில் ஒருவர் இறந்த நிலையிலும் மீண்டும் இயங்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
முழு ஊரடங்கு காரணமாக வணிக நிறுவனங்கள் முதல் தெருவோரக் கடைகள் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து முதல் தனியார் போக்குவரத்துவரை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. திருமணம், இறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்குச் செல்வதற்குக்கூட அரசின் அனுமதி பெற வேண்டிய தேவையுள்ளது.
அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்வதற்குக்கூடக் காவல்துறையிடம் ஆவணங்களைக் காட்டவேண்டிய நெருக்கடி நிலையுள்ளது. பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க, அரசுக்கு ஒத்துழைக்கும் வகையில் இத்தனை இடர்பாடுகளையும் தாங்கிக்கொண்டு கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே வாழ்வா? சாவா? என மக்கள் போராடி வரும் நிலையில், தொற்றுப்பரவ அதிக வாய்ப்புள்ள பெருந்தொழிற்சாலைகளைத் தொடர்ந்து இயங்க அரசு அனுமதியளித்திருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
அரசு பாடம் கற்க வேண்டும்
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் தொற்றுப் பரவலில் முன்னணியில் இருப்பதற்கு, தொடக்கத்தில் அங்குள்ள தொழிற்நிறுவனங்கள் அனுமதியின்றித் தொடர்ந்து இயங்கியதை அரசு தடுக்கத் தவறியதே முக்கியக்காரணம். எனினும், அதிலிருந்து பாடமும், படிப்பினையும் கற்றுக்கொள்ளாமல் பெருந்தொழிற்சாலைகளை இன்றுவரை இயங்க அனுமதித்துக் கொண்டிருப்பது மிகக் கொடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.