தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 6, 2022, 6:19 AM IST

ETV Bharat / city

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு பின் பிறந்த குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.1.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த தனம். இவருக்கு, ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால், 2014ஆம் ஆண்டு ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
இந்த நிலையில், தனம் மீண்டும் கர்ப்பம் தரித்தார். அவரை பரிசோதித்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்து விட்டதாக அறிக்கை கொடுத்தனர்.

இதனால், தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி, தனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, சில நேரங்களில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடையவும் வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விஷயம் அறுவை சிகிச்சைக்கு முன்பே மனுதாரருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு கோர முடியாது என்று அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டும் கர்ப்பம் தரிக்காது என முழுமையாக நம்பிய நிலையில் மீண்டும் கருவுற்ற மனுதாரருக்கு இழப்பீடு பெற உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்தார்.

மேலும், மூன்றாவது பெண் குழந்தைக்கு 21 வயது வரையிலோ அல்லது பட்டப்படிப்பு வரையிலோ கல்வி கட்டணம், பாடபுத்தகங்கள், எழுதுபொருள்கள் ஆகியவற்றுக்காக மாதம் ரூ.10 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மனுதாரரின் 3ஆவது குழந்தையையும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் அரசு சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிப். 8இல் நீட்டுக்கு எதிரான சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details